AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘200 யூனிட் இலவச மின்சாரம்’.. தமிழக அரசுக்கு இத்தனை ஆயிரம் கோடி கூடுதல் நிதிச்சுமையா?.. ஷாக் தகவல்!!

500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவின் மேடையிலேயே, முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டார். இது தவெக அரசின் மிக முக்கியமான மக்கள் நலத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

‘200 யூனிட் இலவச மின்சாரம்’.. தமிழக அரசுக்கு இத்தனை ஆயிரம் கோடி கூடுதல் நிதிச்சுமையா?.. ஷாக் தகவல்!!
முதல்வர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 May 2026 14:08 PM IST

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளைப் பதவியேற்ற முதல் நிமிடத்திலேயே தொடங்கினார். அவ்வாறு, தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ‘200 யூனிட் இலவச மின்சாரம்’ வழங்கும் திட்டத்தில் அவர் முதல் கையெழுத்திட்டது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே வேளையில், இந்தத் திட்டத்தால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை குறித்த அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க: கோட் சூட் போட்ட விஜய்.. எம். எல்.ஏ.க்கள் பதவியேற்பு.. முதல் நாள் சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்:

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், தனது தேர்தல் அறிக்கையில் மின்சாரக் கட்டணக் குறைப்பு குறித்து முக்கிய வாக்குறுதி அளித்திருந்தது. அதாவது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. அதன்படி, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவின் மேடையிலேயே, முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டார். இது தவெக அரசின் மிக முக்கியமான மக்கள் நலத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

கூடுதல் நிதிச்சுமை எவ்வளவு?

இந்தத் திட்டத்தின் சாதகமான பக்கங்களுக்கு நடுவே, இது தமிழக அரசின் கருவூலத்திற்கு ஏற்படுத்தும் அழுத்தம் குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின்படி, இந்த புதிய மின்சாரத் திட்டத்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 2,000 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பழைய திட்டம் vs புதிய திட்டம்:

தமிழக அரசு ஏற்கனவே வழங்கி வரும் 100 யூனிட் இலவச மின்சார மானியத்துடன், தற்போது இந்த கூடுதல் சலுகையும் சேர்வதால் மின்சார வாரியத்திற்கு அரசு வழங்க வேண்டிய மானியத் தொகை கணிசமாக உயர்கிறது. இலவச மின்சாரத்திற்காக அரசு வழங்கும் மொத்த மானியத் தொகை இனி 10,100 கோடி ரூபாயைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்துவோருக்கான மானியம் மட்டுமே 9,100 கோடி ரூபாயாக இருக்கும் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

முந்தைய திட்டத்தின் கீழ், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட்டிற்கு ₹2.35 மட்டுமே அரசு மானியமாக வழங்கியது. ஆனால் புதிய திட்டத்தின்படி, சுமார் 2.45 கோடி நுகர்வோருக்கான முழு கட்டணமான ₹4.95 (ஒரு யூனிட்டிற்கு) மொத்தமாக அரசே ஏற்க வேண்டியுள்ளது.

சவால்களும் எதிர்பார்ப்புகளும்:

ஏற்கனவே கடன் சுமையில் தத்தளித்து வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (TANGEDCO), இந்த கூடுதல் ₹2,000 கோடி சுமை பெரும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அரசு இந்த நிதிப் பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கப் போகிறது, மற்ற துறைகளின் நிதியைப் பயன்படுத்துமா அல்லது புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்குமா என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும்.

இருப்பினும், சாமானிய மக்களின் மாதந்திரச் செலவுகளில் மின்சாரக் கட்டணம் ஒரு பெரும் பங்கினை வகிக்கும் நிலையில், இந்த 200 யூனிட் இலவசத் திட்டம் பொதுமக்களுக்கு ஒரு மிகப்பெரிய பொருளாதார விடுதலையாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : பணம் இல்லை என பேசாதீங்க.. திசைதிருப்பாதீங்க – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கேள்விகளை அடுக்கிய முக ஸ்டாலின்!

Follow Us