புதுச்சேரி அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து…பொங்கலுக்கு ஊருக்கு சென்ற 10 பயணிகள் காயம்!
Omni Bus Accident: சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு புறப்புட்ட தனியார் ஆம்னி பேருந்தானது புதுச்சேரி அருகே இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பயணிகள் காயம் அடைந்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நேரிட்டது.

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக ஏராளமான பொது மக்கள் சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு , தர்மபுரி, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு அரசுப் பேருந்து, தனியார் பேருந்து, ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பேருந்து மற்றும் ரயில்களில் அதிகளவிலான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து, தஞ்சாவூருக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (ஜனவரி 13) புறப்பட்டது. இந்தப் பேருந்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பேருந்தானது, புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு அருகே இன்று புதன்கிழமை (ஜனவரி 14) அதிகாலை சென்று கொண்டிருந்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து கட்டுப்பாடு இன்றி சென்று சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டை மீது பயங்கரமாக மோதியது. இதில், சாலையின் நடுவே பேருந்து தலை குப்புற கவிழ்ந்தது. அப்போது, இந்த பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்தனர். பேருந்து விபத்தை அறிந்ததும், பயணிகள் சத்தமிட்டு கதறினர். இதில், சுமார் 10 பயணிகள் காயம் அடைந்தனர்.
மேலும் படிக்க: நாட்டு வெடிகுண்டை கடித்த குட்டி யானை…வாய் சிதறி பலியான சோகம்…விவசாயியை கைது செய்த வனத்துறை!
சாலையின் நடுவே கவிழ்ந்த பேருந்து மீட்பு
இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் பேருந்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, சாலையின் நடுவே தலை குப்புற கவிழ்ந்து கிடந்த பேருந்தை தீயணைப்பு வீரர்கள் கிரேன் மூலம் மீட்டனர்.
ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் நேரிட்ட விபத்து
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் ஆம்னி பேருந்தின் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே, பேருந்தானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போலீசார் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தியதுடன், போக்குவரத்து நெரிசலை சீரமைத்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: மயக்க மருந்து கொடுத்து தங்க நகை திருட்டு… சென்னை அரசு மருத்துவமனை செவிலியர் கைது