Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Neeraj Chopra: உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த தங்க மகன்.. பீட்டர்ஸை பின்னுக்கு தள்ளிய நீரஜ் சோப்ரா!

World No.1 Javelin Thrower: பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பின்னர் உலகத் தரவரிசையில் முதலிடத்தை இழந்த நீரஜ் சோப்ரா, தற்போது மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். டயமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். அடுத்ததாக, பெங்களூருவில் நடைபெறவுள்ள சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஆண்டர்சன் பீட்டர்ஸை பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து சிறப்பான வெற்றிகளைப் பெற்று வருகிறார்.

Neeraj Chopra: உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த தங்க மகன்.. பீட்டர்ஸை பின்னுக்கு தள்ளிய நீரஜ் சோப்ரா!
நீரஜ் சோப்ராImage Source: AP
mukesh-kannan
Mukesh Kannan | Published: 28 Jun 2025 16:44 PM

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு பிறகு நம்பர் 1 இடத்தை தவறவிட்டார். இப்போது, கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு, மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். 2 முறை தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2025ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் வென்று சிறப்பான தொடக்கம் பெற்றார். இதன் பிறகு, நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக்கின் (Diamond League 2025) தோஹா லெக்கில் 90.23 மீட்டர் எறிந்து புதிய தேசிய சாதனையைப் படைத்தார். இதன்மூலம், 90 மீட்டருக்கு மேல் எறிந்த சாதனையை முதல் முறையாக படைத்தார். இருப்பினும், இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது இடத்தை மட்டுமே பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, போலந்தில் உள்ள ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவுப் போட்டியில் நீரஜ் மீண்டும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பீட்டர்ஸை பின்னுக்கு தள்ளிய நீரஜ் சோப்ரா:

கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 89.91 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா 88.39 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு, நீரஜ் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பீட்டர்ஸை பின்னுக்குத் தள்ளி நீரஜ் சோப்ரா கலக்கி வருகிறார்.

தரவரிசை பட்டியல்:

உலக ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா முதலிடத்தில் உள்ளார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 2வது இடத்திலும், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் மூன்றாவது இடத்தில் உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் 1370 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். அதேநேரத்தில், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் லாட்லெஜ்ச் 5வது இடத்திலும் உள்ளனர்.

நீரஜ் சோப்ராவின் அடுத்த போட்டி எப்போது..?

வருகின்ற 2025 ஜூலை 5ம் தேதி பெங்களூருவில் கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், உலகின் சிறந்த வீரர்கள் பலரும் பங்கேற்க இருக்கின்றனர். இதுதவிர, நீரஜ் சோப்ரா உள்பட 5 இந்திய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் முதல் முறையாக ஒரு சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) ஒப்புதல் அளித்துள்ளது.