Rishabh Pant: அம்பயரின் முடிவுக்கு ஆட்சேபணை.. ரிஷப் பண்டிற்கு ஐசிசி கடும் எச்சரிக்கை..!
IND vs ENG 1st Test: இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட் இரண்டு சதங்கள் அடித்தாலும், ஐசிசி விதி மீறலுக்காக எச்சரிக்கை பெற்றுள்ளார். லீட்ஸ் டெஸ்டின் மூன்றாம் நாளில், அம்பயரின் பந்து சோதனைக்குப் பிறகு, பந்தை தரையில் வீசியதற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலை 1 குற்றமாகக் கண்டறியப்பட்டு, ஒரு டெமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டது. மீண்டும் இத்தகைய தவறு செய்தால் போட்டித் தடை விதிக்கப்படலாம்.

ரிஷப் பண்ட்
இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி (IND vs ENG 1st Test) பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி தொடங்கப்பட்டது முதல் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் பெயர் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் (Rishabh Pant) உலக சாதனை படைத்தார். இந்த சாதனை படைத்தது மட்டுமின்றி, போட்டியின்போது பண்ட் ஒரு தவறையும் செய்தார். இதன் காரணமாக, ரிஷப் பண்ட் கண்டிக்கப்பட்டுள்ளார். அதாவது ஐசிசி (ICC) நடத்தை விதிகளை மீறியதாக ரிஷப் பண்ட் நிலை 1ன் கீழ் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, போட்டி அம்பயர், ரிஷப் பண்டை கண்டித்து விடுவித்தார். நல்லவேளையாக ரிஷப் பண்ட் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஐசிசி எச்சரிக்கை:
இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சர்வதேச போட்டிகளில் அம்பயரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அல்லது ஆட்சேபணை தெரிவிப்பது தொடர்பான பிரிவு 2.8ம் கீழ் பண்ட் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளார். இந்த நடத்தை விதிகளை மீறியதற்காக பண்ட்டின் கணக்கில் 1 டெமெரிட் புள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதே தவறுகள் மீண்டும் செய்தால் ஒரு டெஸ்ட் அல்லது 2 வரையறுக்கப்பட்ட போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படலாம்.
பண்ட் என்ன தவறு செய்தார்..?
🚨 RISHABH PANT RECEIVES ICC WARNING FOR CODE OF CONDUCT BREACH 🚨
– On Day 3, Pant expressed frustration by throwing the ball on the ground after umpires inspected it and chose not to replace it. (via Cricbuzz)#RishabhPant #TestCricket #INDvsENGTest #INDvsENG pic.twitter.com/XrpkHgczzq
— TheCric.Zone (@TheCricZone22) June 24, 2025
ரிஷப் பண்ட் அப்படி என்ன தவறு செய்தார் என்பது இப்போது கேள்வியாக உள்ளது. இந்த சம்பவம் லீட்ஸ் டெஸ்டின் 3வது நாளில் நடந்தது. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் 61வது ஓவரின் போது, பந்தை சரிபார்த்த பிறகு அம்பயர் அதன் வடிவம் சரியாக உள்ளது மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். அப்போது, பண்ட் தனது கையில் வைத்திருந்த பந்தை தரையில் வேகமாக வீசி தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதை தொடர்ந்து, ரிஷப் பண்ட் தான் செய்த தவறை போட்டி அம்பயர் ரிச்சி ரிச்சர்ட்சனிடம் ஒப்புக்கொண்டார். இதனால், இந்த வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லை. கள நடுவர்கள் பால் ரைபிள் மற்றும் கிறிஸ் ஜாஃப்னி ஆகியோர் பண்ட்-ன் எதிர்ப்பு குறித்து போட்டி நடுவரிடம் புகார் அளித்தனர். அவர்களைத் தவிர, மூன்றாவது நடுவர் ஷர்புதுல்லா மற்றும் நான்காவது நடுவர் மைக் பர்ன்ஸ் ஆகியோரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
நிலை 1ன் கீழ் குற்றவாளிகளுக்கு என தண்டனை:
நிலை 1ன் கீழ் குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட வீரர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை ஒரு கண்டனம் ஆகும். அதிகபட்ச தண்டனையாக போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் கழித்தல் மற்றும் ஒன்று அல்லது இரண்டு டெமெரிட் புள்ளிகளைச் சேர்ப்பதாகும்