Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

1983 Cricket World Cup: கபில் தேவின் தலைமை.. 1983ல் இதே நாளில் முதல் உலகக் கோப்பை.. கலக்கிய இந்திய அணி!

Kapil Dev's Legendary Team: ஜூன் 25, 1983 அன்று, கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. 183 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா, சிறப்பான பந்துவீச்சின் மூலம் வெஸ்ட் இண்டீஸை 140 ரன்களுக்குள் சுருட்டியது. கபில் தேவின் அற்புதமான கேட்ச் மற்றும் பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த வரலாற்றுச் சாதனை இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது.

1983 Cricket World Cup: கபில் தேவின் தலைமை.. 1983ல் இதே நாளில் முதல் உலகக் கோப்பை.. கலக்கிய இந்திய அணி!
1983 உலகக் கோப்பை இந்திய அணி வென்ற தருணம்Image Source: ICC
mukesh-kannan
Mukesh Kannan | Published: 25 Jun 2025 18:37 PM

இன்றைய தேதி அதாவது ஜூன் 25ம் தேதி ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். ஏனென்றால், கடந்த 1983ம் ஆண்டு இதே நாளில், இந்திய அணி (Indian Cricket Team) லாட்ர்ஸில் முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று உலக சாம்பியனானது. 1983ம் ஆண்டு இங்கிலாந்தில் வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று உலகக் கோப்பையை வென்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கபில் தேவ் (Kapil Dev) தலைமையிலான இந்திய அணி வியக்கத்தக்க வகையில் பலம்மிக்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளை தோற்கடித்து உலக சாம்பியனானது. இந்த உலகக் கோப்பையில் ஒட்டுமொத்த உலகமும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.

இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது எப்படி..?

1983ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு பக்கம் இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியும், 1975, 1979 உலகக் கோப்பையில் மோசமாக செயல்பட்ட இந்திய அணியும் மோதியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அப்போது, ஒருநாள் போட்டிகள் 60 ஓவர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் அதிகபட்சமாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ரன் எண்ணிக்கைதான் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது.

140 ரன்களுக்குள் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்:

இந்திய அணி 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால், இந்த இலக்கை பலம் மிக்க வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக துரத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய இலக்காக அமையவில்லை. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பல்விந்தர் சிங் சந்து, வெஸ்ட் இண்டீஸின் கார்டன் கிரீனிட்ஜை ஒரு ரன்னுக்கு அவுட்டாக்கி முதல் விக்கெட்டை தேடி தந்தார். ஸ்கோர் வெறும் 5 ரன்னாக இருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த விக்கெட்டை இழந்தது. இதற்கு பிறகு, விவியன் ரிச்சர்ட்ஸ் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்து 33 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பயத்தை கொடுத்தார்.

1983 உலகக் கோப்பை வெற்றி:

சிறப்பாக விளையாடி வந்த ரிச்சர்ட்ஸ் மதன் லாலின் பந்தில் மிட் – விக்கெட்டை நோக்கி ஒரு ஹை ஷாட் ஆடினார். அப்போதுதான், கபில் தேவ் பின்னால் நீண்ட தூரம் ஓடி சென்று ஒரு அற்புதமான கேட்சை பிடித்தார். இது கிரிக்கெட் வரலாற்றில் இன்னும் சிறந்த கேட்ச்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 57 ரன்களில் 3வது விக்கெட்டை இழந்தது. ரிச்சர்ட்ஸ் அவுட் ஆனவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிய தொடங்கியது. தொடர்ந்து, 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணி 52 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 43 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக, இந்திய அணி 1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியான இன்று முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

இந்திய அணி அதிகபட்சமாக மதன் லால் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மொஹிந்தர் அமர்நாத் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், பல்விந்தர் சிங் சந்து 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். இந்த வரலாற்று வெற்றிக்கு பிறகு, மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு, 2011ம் ஆண்டு இந்திய அணி மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சாதனையை படைத்தது.