தைப்பூசம் கோலாகலம்.. அறுபடை வீடுகளில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்.. விண்ணை பிளக்கும் அரோகரா கோஷம்!!
Thaipusam 2026: இன்று காலை முதலே முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலைகள் தைப்பூசத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. முருகன் கோயில்களில் காலை முதல் கந்தனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளந்து வருகிறது.

தைப்பூசம் 2026
தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக தைப்பூசம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நன்னாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசம் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம், அன்னை பார்வதி தேவி முருகப்பெருமானுக்கு வேல் அளித்த நாள் என்பதுதான். அந்த வேல், தீமையை அழிக்கும் சக்தியாகவும், அறியாமையை நீக்கும் ஞானத்தின் வடிவமாகவும் கருதப்படுகிறது. அதனால் தைப்பூசம் அன்று வேல் வழிபாடு மிகுந்த சிறப்புடன் நடைபெறுகிறது. இந்த நாளில் முருக பக்தர்கள் விரதம் இருந்து, உடலும் மனமும் தூய்மையுடன் வழிபாடு செய்கிறார்கள். காவடி எடுத்தல், பால் அபிஷேகம், முருகன் பாடல்கள் பாடுதல், கந்த சஷ்டி கவசம் பாராயணம் போன்றவை முக்கியமான வழிபாடுகளாகும். உடல் துன்பத்தையும் ஏற்று, ஆன்மிக உயர்வை அடைவதே தைப்பூசத்தின் தத்துவமாக விளங்குகிறது.
சக்தி வாய்ந்த தைப்பூசம்:
குறிப்பாக, இந்த வருட தைப்பூசம் மிகுந்த சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது. காரணம், தை மாதத்தில் வரும் பூச நக்ஷத்திரமும் பௌர்ணமியும் ஒரே நாளில் இணைவதுதான் தைப்பூசம். மேலும், இந்த ஆண்டு அது ஞாயிற்றுக்கிழமையில் வந்துள்ளதால், பூமிக்கு அதிகமான தெய்வீக ஆற்றல்கள் கிடைக்கும் நாளாகக் கருதப்படுகிறது. இதையொட்டி, இன்றைய தினம் முருகப்பெருமானை பக்தர்கள் மனமொருகி வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேறும் என்பதும் ஐதீகம்.
அறுபடை வீடுகளில் விழாக்கோலம்:
அந்தவகையில், நடப்பாண்டிற்கான தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலை முதலே முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான முருகன் தங்கத்தேரில் உலா வரும் நிகழ்வு பழமுதிர்ச் சோலை உள்ளிட்ட பல முருகன் கோயில்களில் நிறைவு பெற்றுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலைகள் தைப்பூசத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. முருகன் கோயில்களில் காலை முதல் கந்தனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளந்து வருகிறது.
லட்சகணக்கில் திரளும் பக்தர்கள்:
குறிப்பாக, திருச்செந்தூர் மற்றும் பழனியில் கடந்த சில நாட்களாகவே லட்சக்கணகக்கில் பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இந்த அறுபடை வீடுகள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். மேலும், காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து பால்காவடி எடுத்து வருகின்றனர். சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்ட திருப்பரங்குன்றத்திலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
சென்னை வடபழனியில் பக்தர்கள் கூட்டம்:
தைப்பூசத்தை முன்னிட்டு குழந்தை வரம் வேண்டி, திருமண வரம் வேண்டி, நல்ல வேலை வேண்டி பல பக்தர்களும் கோயில்களில் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வடபழனி முருகன் கோயிலில் நேற்று மாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். இன்று காலை முதலே ஆயிரக்கணக்கில் முருகப்பெருமானைத் தரிசிக்க குவிந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: தைப்பூசம் 2026: முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி? எப்போது விரதம் தொடங்க வேண்டும்? முழு விவரம்!!