Spiritual: வெற்றிலையில் தீபம் ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?
வெற்றிலை தீபம் ஏற்றுவது வாழ்வில் வெற்றியையும் செழிப்பையும் பெறுவதற்கான ஒரு பழங்கால வழிபாட்டு முறையாகும். லட்சுமி, சரஸ்வதி, பார்வதி தேவிகளின் அருளைப் பெறவும், மன அமைதியையும், நல்ல எண்ணங்களையும் பெருக்கவும் இது உதவுகிறது. இந்த வழிபாடு முருகப்பெருமானுக்கும் உகந்தது என சொல்லப்படுகிறது.

தீபம் என்பது நம் வாழ்க்கையில் இருக்கும் இருளை அகற்றி வெளிச்சம் கொடுத்து நம்மை உயர்த்தி விடுவதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதில் பிரகாசிக்கும் தீச்சுடரை பார்க்கும்போது நமக்கே நம்மை அறியாமல் மனம் புத்துணர்ச்சி பெறும். துன்பத்திலிருந்து மீண்டும் விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கும். கவலைகள் காணாமல் போகும் அளவுக்கு தீபத்துக்கு மகிமை உள்ளது. பொதுவாக வீட்டின் பூஜையறை, ஆலயம் என எங்கு வேண்டுமானலும் நாம் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. இத்தகைய தீபத்துக்கு ஆன்ம ஒளி என்ற பெயர் உண்டு. நம் மனதில் உள்ள அறியாமை, தீய எண்ணங்கள் அனைத்தும் நீங்கி புது மனிதனாக, தூய எண்ணங்களை கொண்டவராக நாம் திகழ்வதே இந்த தீபத்தின் விளைவாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக வெற்றிலை ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகும். கட்டாயம் மங்களகரமான நிகழ்வுகளில் இடம்பெறும். இதனை பிரித்து படித்தால் வெற்றி + இலை = வெற்றிலை என வரும். அத்தகைய வெற்றியின் நிலையாக இருக்கும் இந்த வெற்றிலையில் தீபம் ஏற்றினால் பல பலன்கள் கிடைக்கும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
வெற்றிலை தீபத்தின் மகிமை
வெற்றிலையை பொருத்தவரை அதன் நுனியில் லட்சுமி தேவியும் நடுவில் சரஸ்வதி தேவியும் காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது பல தலைமுறைகளாக பயன்படுத்தக்கூடிய ஒரு புனித பொருளாக பார்க்கப்படுகிறது. இத்தகைய வெற்றிலையில் நாம் தீபமேற்றி வழிபட்டால் நமக்கு வாழ்வில் வெற்றிகள் வந்து சேரும் என ஐதீகமாக உள்ளது. அதன்படி 12 வெற்றிலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஆறு வெற்றிலைகளை மயில் தோகை போல வட்டமாக அடுத்தடுத்து அடுக்கிக் கொள்ள வேண்டும். அடுக்கி வைக்கப்பட்ட வெற்றிலைக்கு நடுவில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
மீதமிருக்கும் ஆறு வெற்றிலைகளை காம்புகளை எடுத்துவிட்டு அதனை விளக்கில் இருக்கும் எண்ணெயில் போட்டு விட வேண்டும். விளக்கு எரியும்போது இந்த காம்பும் இருப்பதால் நல்ல மணம் வீசும். இது வெற்றிலை வழிபாட்டிற்கு நல்ல பலன்களை தரும். வெற்றிலை தீபம் இத்தனை வாரங்களுக்கு தொடர்ந்து ஏற்ற வேண்டும் என்று விதிகள் எல்லாம் கிடையாது. நாம் நம்பிக்கை கொள்ளும் வரை அதனை மேற்கொள்ளலாம். அது வாரமாக இருந்தாலும் சரி நாட்களாக இருந்தாலும் சரி நம்முடைய முடிவு தான்.
மேலும் தீபமேற்றி வழிபடும் போது மனதில் வேண்டிக்கொண்டே செயல்பட வேண்டும். சிலருக்கு நினைத்தது நடந்து விட்டால் தொடர்ந்து வெற்றிலை தீபம் ஏற்றும் பழக்கம் இருக்கும். அதனை கடைபிடிப்பதில் எந்த தவறும் கிடையாது பொதுவாக வெற்றிலை தீபம் முருகப்பெருமானுக்கு உகந்தது என்பதால் மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தி தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)