Vaikasi Visakam: வைகாசி விசாகம்.. வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி?

வைகாசி விசாக நாளில் வீட்டில் முருகப்பெருமானை வழிபடுவது எப்படி என்பதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும் என ஆன்மிக அன்பர்கள் தெரிவிக்கின்றனர். அன்றைய நாளில் வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து, முருகன் சிலை அல்லது வேலுக்கு பால், பன்னீர், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.

Vaikasi Visakam: வைகாசி விசாகம்.. வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி?

கடவுள் முருகன்

Published: 

03 Jun 2025 10:48 AM

தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகப்பெருமான் பிறந்த தினமாக வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரம் கருதப்படுகிறது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக பிரிந்து முருகனாக அவதாரமெடுத்து கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இப்படியான வைகாசி விசாகமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து முருகன் கோயில்களிலும் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் வைகாசி விசாக நாளில் நாம் வீட்டில் வழிபடுவது எப்படி என்பது பற்றிக் காணலாம்.

வீட்டில் வழிபடும் முறை

வைகாசி விசாகநாளில் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் பலரும் விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வார்கள். சிலரால் உடல்நல பிரச்சனை மற்றும் இதர காரணங்களால் விரதம் மேற்கொள்ள முடியாவிட்டாலும் வழிபாடை கண்டிப்பாக மேற்கொள்வார்கள். இப்படி ஆன நிலையில் விசாகத்திற்கு முதல் நாள் வீடு முழுவதையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் பூஜை அறையில் விளக்கு உள்ளிட்ட அனைத்தையும் சுத்தமாக வைத்துவிட வேண்டும்.

பின்னர் முருகப்பெருமானின் புகைப்படம், திருஉருவ சிலை, வேல் என எது பூஜை அறையில் இருந்தாலும் அதனை சுத்தப்படுத்தி அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரித்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

வைகாசி விசாக தினத்தில் அதிகாலையில் இருந்து புனித நீராடி நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும். தொடர்ந்து பூஜை அறையில் முருக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வேல் அல்லது விக்ரகம் வைத்திருப்பவர்கள் இன்றைய நாளில் பால் பன்னீர் சந்தனம் விபூதி போன்ற அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்து முருகப்பெருமானின் மனம் குளிர செய்யலாம். இந்த வழிபாடு மேற்கொள்ளும் போது முருகனுக்கு உரிய திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், ஏதேனும் பக்தி பாடல்கள் ஆகியவற்றை நாம் பாராயணம் செய்வது மிகுந்த நன்மை தருவதாகும்.

வைக்க வேண்டிய பொருட்கள்

நீங்கள் பூஜை வழிபாடு மேற்கொள்ள போகிறீர்கள் என்றால் பெரிதாக இல்லாவிட்டாலும் உங்களால் முடிந்த அளவிற்கு மலர்கள் மற்றும் பிரசாதம் வைத்து வழிபட வேண்டும். அப்படியாக முருகப்பெருமானுக்கு முல்லை மல்லி, செவ்வரளி தாமரை செண்பகப் பூ சிவப்பு வெற்றி மலர் ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். இந்த ஆறில் ஒன்றை வைத்து வழிபடலாம் அல்லது ஆறு மலர்களையும் கொண்டும் பூஜை செய்யலாம். அதேபோல் முருகப்பெருமானுக்கு ஆறு வகையான இனிப்புகள் வைத்து தீப தூபம் காட்டி வழிபாடு மேற்கொள்ளலாம்.

இந்த பூஜையில் கட்டாயம் ஆறுமுகத்தை குறிக்கும் வகையில் ஆறு நெய் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். தீப தூப ஆராதனைகளுக்குப் பிறகு கைகளில் மலர்களை அள்ளி நெஞ்சிற்கு அருகே இரண்டு கைகளையும் கூப்பி குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பெயர்களையும் சொல்ல வேண்டும். பின்னர் நாங்கள் அனைவரும் உன்னுடைய பக்தர்கள் எங்களுக்கு என்ன வேண்டும் என்பது உனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் உன்னுடைய அருள் எனக்கு எப்போதும் வேண்டும் என மனதை நினைத்துக் கொண்டு முருகப்பெருமான் பெயரை உச்சரித்து மலர்களை அவர் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

பின்னர் அன்றைய நாளில் உங்களால் முடிந்த அளவுக்கு தானம் செய்யலாம். பின்னர் மாலையில் அருகிலுள்ள ஏதேனும் கோயிலுக்கு சென்று முருகனை வழிபடலாம்.

(ஆன்மிக நம்பிக்கையின்படி சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)