AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நோய்கள் நீக்கும் கோவை மருதமலையில் அருள்புரியும் மருதாச்சலமூர்த்தி…

Marudamalai Murugan Temple: கோவை மருதமலையில் உள்ள மருதாச்சலமூர்த்தி முருகனை தரிசித்தால் நோய்கள் நீங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.837 படிகள் ஏறிச் செல்லும் இந்த மலைக்கோயில், பாம்பாட்டிச் சித்தர் வடித்த மூலஸ்தான சிலையால் சிறப்பு பெற்றது. அர்த்தஜாம பூஜை, மருது சுனை தீர்த்தம் மற்றும் ‘ஏழாம் படை வீடு’ எனும் பெருமை இத்தலத்தை தனித்துவப்படுத்துகின்றன.

நோய்கள் நீக்கும் கோவை மருதமலையில் அருள்புரியும் மருதாச்சலமூர்த்தி…
மருதமலை மருதாச்சலமூர்த்திImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 28 Mar 2026 11:30 AM IST

கோவை மாவட்டம் மருதமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன், மருதாச்சலமூர்த்தி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இவரை வணங்கினால் நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். மலைமேல் அமைந்துள்ள இந்த ஆலயத்தை அடைய பக்தர்கள் 837 படிகள் ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த மலை, ஆன்மிக அமைதியையும் உடல்நல நன்மைகளையும் வழங்கும் தலமாக கருதப்படுகிறது.

பாம்பாட்டிச் சித்தர் வடித்த முருகன் சிலை

மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் இடும்பன் சன்னதி காணப்படுகிறது. இதற்கு எதிரே புலி வாகனம் அமைந்துள்ளது. மருதமலையில் முருகனின் அருளைப் பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கென புதிய சிலையை வடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சிலையே இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இரண்டு கரங்களுடன் தண்டபாணியாக காட்சி தரும் இந்த முருகன், கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்தபடி பழநி முருகனைப் போல தோன்றுகிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு போன்ற அலங்காரங்களுடன் காட்சி தருகிறார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பு மற்றும் தங்க கவசமும் அணிவிக்கப்படுகிறது.

அர்த்தஜாம பூஜையின் சிறப்பு

மருதமலையில் அர்த்தஜாம பூஜை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த பூஜை நேரத்தில் மட்டுமே முருகனை தண்டாயுதபாணி சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்பொழுது எந்த ஆபரணங்களும் இல்லாமல், வெறும் வேட்டி மட்டும் அணிவிக்கப்பட்ட நிலையில் சுவாமி காட்சி தருகிறார். இந்த அரிய தரிசனம் பக்தர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது.

ஏழாம் படை வீடு எனும் பெருமை

அருணகிரியாரால் பாடப்பெற்ற இந்தத் தலம், ‘ஏழாம் படை வீடு’ என பக்தர்களால் கருதப்படுகிறது. மலைப்பாறைகளுக்கு இடையே உள்ள குகையில் பாம்பாட்டிச் சித்தர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு முருகனுக்கு பூஜை முடிந்ததும் சித்தருக்கும் பூஜை நடைபெறுகிறது. தினமும் பாலை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது; மறுநாள் அது குறைந்திருப்பதாகக் கூறப்படும் ஐதீகம் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பாம்பு முருகன் மற்றும் ஐதீகங்கள்

பாம்பாட்டிச் சித்தர் சன்னதியில் உள்ள பாறையில் நாக வடிவம் காணப்படுகிறது. இந்த வடிவிலேயே முருகன் சித்தருக்கு காட்சி தந்ததாக நம்பப்படுகிறது. இதனால் அந்த நாகத்தை முருகனாகவே கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர். மேலும், அதன் பின்புறத்தில் உள்ள மூன்று வடிவங்கள் சிவன், கணபதி மற்றும் அம்பிகையாக கருதப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன.

Also Read: பங்குனி உத்திரம்.. 1000 பௌர்ணமிக்குச் சமமான பலன்களை அள்ளித்தரும்.. 

மருந்து குணமுள்ள மருதமலை

மருதமரங்கள் நிறைந்த இந்த மலை, பல மூலிகைச் செடிகள் கொண்டதால் நோய் தீர்க்கும் சக்தி உடையதாக கருதப்படுகிறது. இதனால் முருகன் ‘மருதாச்சலமூர்த்தி’ என அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் விருட்சமாக மருதமரம் விளங்குகிறது. ‘மருது சுனை’ எனப்படும் தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தீர்த்தம் மருதமரத்தின் அடியில் இருந்து உருவாகி, சுவாமியின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆதி மூலஸ்தானத்தின் சிறப்பு

இந்த ஆலயத்தில் முருகன் சுயம்புமூர்த்தியாக இருப்பது மிகுந்த சிறப்பாகும். அவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்புவடிவில் காணப்படுகின்றனர். முருகனின் பின்புறத்தில் பிளவு காணப்படுவது ஒரு விசேஷ அம்சமாகும். வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்றுக் குறைந்த உயரத்திலும் காட்சி தருகின்றனர். இந்த மூர்த்தியே இத்தலத்தின் ஆதிமூர்த்தி என கருதப்பட்டு, அவருக்கு முதல்பூஜை செய்யப்படுகிறது.

Follow Us