AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காலையிலேயே இதைப் பேசாதீங்க… விவாகரத்து வரை கொண்டு செல்லும் கணவன்-மனைவி சண்டைகள்!

Morning Conversations: காலையில் கண் விழித்தவுடன் கடந்த காலத் தவறுகளையும், பழைய சண்டைகளையும் மீண்டும் கிளறிப் பேசுவது தம்பதியரிடையே மனக்கசப்பை அதிகரித்து விவாகரத்து வரை வழிவகுக்கும். துணையின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்ப்பது உறவின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகும். அவசரமாக வேலைக்குக் கிளம்பும் நேரத்தில் ஒருவரையொருவர் குறை கூறாமல், இன்முகத்தோடு நேர்மறையான வார்த்தைகளைப் பேசி நாளைத் தொடங்குவதே சிறந்ததாகும்.

காலையிலேயே இதைப் பேசாதீங்க… விவாகரத்து வரை கொண்டு செல்லும் கணவன்-மனைவி சண்டைகள்!
Marriage Advice
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 06 Jun 2026 05:19 AM IST

ஒரு நாளின் தொடக்கம் எப்படி அமைகிறதோ, அதைப்பொறுத்தே அன்றைய நாள் முழுவதும் நமது மனநிலையும் செயல்பாடுகளும் தீர்மானிக்கப்படுகின்றன. குறிப்பாக, திருமணமான தம்பதியரிடையே காலையில் மலரும் முதல் உரையாடல், அவர்களது வாழ்நாள் முழுமைக்குமான பிணைப்பைத் தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் நிலவும் அதீத பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக, பெரும்பாலான கணவன்-மனைவியர் காலையிலேயே தங்களுக்குள் விவாதங்களையும் மனக்கசப்புகளையும் தொடங்கிவிடுகின்றனர். இத்தகைய எதிர்மறையான பழக்கவழக்கம் தொடர்ந்தால், அது காலப்போக்கில் பிரிவினை அல்லது விவாகரத்து வரை கொண்டு போய் சேர்க்கும் என்று மனநல ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த கால கசப்புகளை கிளறுதல்

காலையில் கண் விழித்த உடனேயே, பழைய தவறுகளையும் கடந்த கால சண்டைகளையும் மீண்டும் நினைவுபடுத்திப் பேசுவது தம்பதியரிடையே மிகப்பெரிய மன அழுத்தத்தை உருவாக்குகிறது. “அன்று நீ செய்த தவறால்தான் இந்த இழப்பு ஏற்பட்டது” என்பது போன்ற குற்றச்சாட்டுகள், துணையின் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தும். இத்தகைய பேச்சுகள் அதிகாலைப் பொழுதின் நேர்மறை ஆற்றலை முழுமையாக அழித்து, இருவருக்குள்ளும் ஒரு நிரந்தரமான அசுவராசியத்தை விதைத்துவிடும். எனவே, காலையில் பழைய குப்பைகளைக் கிளறுவதைத் தவிர்ப்பது உறவுக்கு நல்லது.

Also Read: ஏன் அதிகாலை வழிபாட்டை முன்னோர்கள் வற்புறுத்தினார்கள்? இதோ வெளிவரும் உண்மை!

மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுதல்

ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமான திறமைகளும் குணநலன்களும் உள்ளன என்பதை தம்பதியர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, காலையிலேயே பக்கத்து வீட்டுக்காரருடனோ அல்லது உறவினர்களுடனோ தனது துணையை ஒப்பிட்டு தாழ்த்திப் பேசுவது, அவர்களின் சுயமரியாதையைப் பெருமளவில் பாதிக்கும். “அவர்களைப் பார், எவ்வளவு பொறுப்பாக இருக்கிறார்கள்” என்ற ஒற்றை வார்த்தை, துணையின் மனதில் தாழ்வுமனப்பான்மையையும் உங்கள் மீதான கோபத்தையும் வளர்த்துவிடும்.

பொருளாதாரப் பற்றாக்குறை மற்றும் நிதி விவாதங்கள்

குடும்பப் பொறுப்புகள் என்று வரும்போது பணப் புழக்கம் மற்றும் பட்ஜெட் குறித்த விவாதங்கள் தவிர்க்க முடியாதவைதான் என்றாலும், அதற்கென ஒரு சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காலையில் காபி குடிக்கும் வேளையிலேயே, “கடன் சுமை அதிகமாகிவிட்டது, இந்த மாத செலவுகளுக்குப் பணமில்லை” எனப் புலம்பத் தொடங்குவது இருவருக்குமே அன்றைய நாளின் உத்வேகத்தைக் குலைத்துவிடும். இத்தகைய நிதி சார்ந்த சவாலான ஆலோசனைகளை மாலை நேரங்களிலோ அல்லது வார இறுதியிலோ நிதானமாகப் பேசுவதே புத்திசாலித்தனமாகும்.

அன்றாட பணிகளில் குறை கூறுதல்

காலை நேரத்தில் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பும் பதற்றத்தில், “நீ எப்போதும் இப்படித்தான், எதையும் ஒழுங்காகச் செய்ய மாட்டாய்” என்று பொதுப்படையாகக் குறை கூறுவது தம்பதியருக்குள் எரிச்சலை மூட்டும். இத்தகைய தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் வார்த்தைப் போர்கள் தம்பதியரின் அன்றாடப் பணிகளைப் பாதிப்பதுடன், அலுவலகத்திலும் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிடுகிறது.

Follow Us