Supreme Court Judges: உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்.. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு!

India Supreme Court Justices: மே 2025 தொடக்கத்தில், உச்சநீதிமன்றக் கொலீஜியத்தின் பரிந்துரையின்படி, நீதிபதிகள் என்.வி. அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய் மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் மூன்று காலியிடங்களை நிரப்புகிறது. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீண்ட கால அனுபவம் பெற்றவர்கள்.

Supreme Court Judges: உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்.. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு!

Justices NV Anjaria, Vijay Bishnoi, and Atul S Chandurkar

Updated On: 

29 May 2025 17:22 PM

டெல்லி, மே 29: 2025 மே மாத தொடக்கத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியம் மேற்கொண்ட பரிந்துரையின்படி, நீதிபதிகள் நிரல் வி.அஞ்சாரியா (Justices NV Anjaria) விஜய் பிஷ்னோய் (Vijay Bishnoi) மற்றும் அதுல் எஸ்.சந்துர்கர் (Atul S Chandurkar) ஆகியோரை இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 3 நீதிபதிகளையும் பதவி உயர்வு செய்வதற்கான இந்த பரிந்துரையை இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமயிலான உச்சநீதிமன்ற கல்லூரி உருவாக்கியது. சமீபத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, அபய் எஸ் ஓகா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் ஓய்வு பெற்றதால் உச்சநீதிமன்றத்தில் 3 இடங்கள் காலியாக இருந்தது. தற்போது அவை நிரப்பப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

இதுகுறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, இந்திய தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்தூர்கர் ஆகியோரை இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதில் குடியரசு தலைவர் மகிழ்ச்சியடைகிறார்” என குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகளின் பின்னணி வரலாறு:

நீதிபதி என்.வி. அஞ்சாரியா:

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.அஞ்சாரியா பணியாற்றி வருகிறார். இவரது சொந்த மாநிலம் குஜராத் ஆகும். நீதிபதி என்.வி. அஞ்சாரியா கடந்த 1988ம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். அப்போது அரசியலமைப்பு, சிவில், தொழிலாளர் மற்றும் சேவை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளை கையாண்டார். குஜராத் உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் குஜராத் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் போன்ற முக்கிய நிறுவனங்களுக்கான நிலையான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி நீதிபதி அஞ்சாரியா குஜராத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2024 பிப்ரவரி 25ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

நீதிபதி விஜய் பிஷ்னோய்:

கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி விஜய் பிஷ்னோய் தற்போது பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 1989ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி ராஜஸ்தானில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். சிவில், குற்றவியல், அரசியலமைப்பு, சேவை மற்றும் தேர்தல் விவகாரங்கள் உட்பட பல்வேறு வழக்குகளை கையாண்ட அனுபவம் இவருக்கு உண்டு. தொடர்ந்து, விஜய் பிஷ்னோய் 2000 மற்றும் 2004 க்கு இடையில் மத்திய அரசின் கூடுதல் நிலை ஆலோசகராகவும் பணியாற்றினார்.

கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2015ம் ஆண்டு நிரந்தர நீதிபதியானார். சமீபத்தில் 2024ம் தேதிபிப்ரவரி 5ம் தேதி கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

நீதிபதி அதுல் எஸ் சந்துர்கர்:

பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தற்போது நீதிபதி அதுல் எஸ் சந்துர்கர் தற்போது நீதிபதியாக பணியாற்றி வருகிறார். கடந்த 1988ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி மும்பையில் தனது வழக்கறிஞர் பணியை தொடங்கிய நீதிபதி அதுல் எஸ் சந்துர்கர், பல நீதிமன்றங்களில் ஆஜராகி பல்வேறு சட்ட சிக்கல்களைக் கையாண்டார். கடந்த 2013ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, நிரந்தர நீதிபதியானார்.