மகாராஷ்டிராவின் அடுத்த துணை முதலமைச்சர்.. இன்று பதவி ஏற்கிறார் அஜித் பவார் மனைவி சுனேத்ரா?
Sunetra Pawar To Be A Maharashtra Deputy CM | மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் பலியான நிலையில், காலியாக உள்ள அவரது பதவியில் அவரின் மனைவி சுனேத்ரா இன்று அமர வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை, ஜனவரி 31 : மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் (Ajit Pawar), ஜனவரி 28, 2026 அன்று தேர்தல் பிரசாரத்திற்காக தனி விமானத்தில் சென்றபோது. விமான விபத்தில் சிக்கி பலியாகினார். இந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் பதவி காலியாக உள்ளது. இதன் காரணமாக அடுத்த துணை முதலமைச்சரை தேர்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் பவாரின் இடத்தை நிரப்பப்போவது யார்?
அஜித் பவாரின் மரணத்தை தொடர்ந்து அவரது பதவி வெற்றிடமாக மாறியது. இந்த நிலையில், அவரின் அடுத்த அரசியல் வாரிசு யார் என்ற கேள்வி எழ தொடங்கியது. இதற்கு கட்சியிலும், ஆட்சியிலும் அஜிப் பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ராவுக்கே வழங்க வேண்டும் என அரசியல் மட்டும் கட்சி வட்டாரங்களில் இருந்து விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசை நேற்று (ஜனவரி 30, 2026) சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க : சபரிமலை தங்க திருட்டு வழக்கு..நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம்…பரபரப்பு தகவல்!
இந்த சந்திப்பில் மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அஜித் பவாரின் மனைவி சுனேத்ராவுக்கு துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று பதவி ஏற்கும் அஜித் பவார் மனைவி
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் அடுத்த துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் இன்று (ஜனவரி 31, 2026) மாலை 5 மணிக்கு பதவி ஏற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.