AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

75 ஆண்டுகள் நிறைவு: மீண்டும் சோம்நாத் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி

PM Modi Visit To Somnath Temple: சோம்நாத் கோவிலை பாதுகாக்க பலர் செய்த பங்களிப்புகளையும் பிரதமர் மோடி தனது கட்டுரையில் நினைவுகூர்ந்துள்ளார். லகுலீஷ் மற்றும் சோம் சர்மன் ஆகியோர் பிரபாஸ் பகுதியை தத்துவ மையமாக மாற்றியதாகவும், வல்லபியின் மன்னர் தர்சேன் IV இரண்டாவது கோவிலை கட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

75 ஆண்டுகள் நிறைவு: மீண்டும் சோம்நாத் கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 May 2026 10:54 AM IST

மே 8, 2026: பிரதமர் மோடி வரும் மே 11ஆம் தேதி மீண்டும் சோம்நாத் கோவிலுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கட்டுரையில், “2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சோம்நாத் சுயமரியாதை விழாவிற்காக நான் சோம்நாத் சென்றிருந்தேன். சோம்நாத் கோவிலின் மீது நடைபெற்ற முதல் தாக்குதலுக்கு 1000 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அந்த நிகழ்வு நடைபெற்றது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “1951ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் Rajendra Prasad இந்த கோட்டைக் கோவிலை திறந்து வைத்த நிகழ்விற்கு 75 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவதற்காக மீண்டும் மே 11ஆம் தேதி சோம்நாத் வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குள் சோம்நாத் கோவிலும் அதன் ‘அழிவிலிருந்து மறுகட்டமைப்பு’ வரை சென்ற பயணத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கிய தருணங்களில் பங்கேற்பது தனக்கு ஒரு பெரும் பாக்கியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். “அழிவிலிருந்து உருவாக்கம் வரை” என்ற ஒரு நாகரிகப் பயணத்தை சோம்நாத் நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சோம்நாத் கோவிலின் முன் பரந்து விரிந்திருக்கும் கடல், மனிதன் காலத்தை வென்று நிற்கும் சக்தியை உணர்த்துவதாகவும், கடலலைகள் எத்தனை பெரிய புயல் வந்தாலும் மனிதன் மீண்டும் கண்ணியத்துடனும் வலிமையுடனும் எழுந்து நிற்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். “மக்களின் உணர்வுகளை நீண்ட காலம் அடக்கி வைக்க முடியாது என்பதை ஒவ்வொரு தலைமுறைக்கும் இந்த அலைகள் நினைவூட்டுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சோம்நாத் பிரதட்சிணையின் முக்கியத்துவம்

பழமையான சாஸ்திரங்களில் “பிரபாஸம் ச பரிக்ரம்ய ப்ரிதிவீக்ரமசம்” என்று கூறப்பட்டிருப்பதை பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதாவது, “தெய்வீகமான பிரபாஸ் (சோம்நாத்) பகுதியை ஒருமுறை சுற்றி வருவது, முழு பூமியையும் சுற்றிவந்ததற்குச் சமம்” என்று பொருள் என அவர் விளக்கமளித்தார்.

மக்கள் இங்கு பிரார்த்தனை செய்ய மட்டுமல்லாமல், எத்தனை தாக்குதல்கள் வந்தாலும் அணையாத ஒரு நாகரிகத்தின் தொடர்ச்சியையும் உணர வருகிறார்கள் என அவர் கூறினார். “பேரரசுகள் எழுந்தும் வீழ்ந்தும் இருக்கலாம், வரலாறு பல மாற்றங்களை சந்தித்திருக்கலாம். ஆனால் சோம்நாத் எப்போதும் நமது உணர்வில் வாழ்ந்துகொண்டே இருக்கிறது” என்றும் தெரிவித்தார்.

சோம்நாத் கோவிலுக்காக போராடியவர்களை நினைவுகூர்ந்த பிரதமர்

சோம்நாத் கோவிலை பாதுகாக்க பலர் செய்த பங்களிப்புகளையும் பிரதமர் மோடி தனது கட்டுரையில் நினைவுகூர்ந்துள்ளார். லகுலீஷ் மற்றும் சோம் சர்மன் ஆகியோர் பிரபாஸ் பகுதியை தத்துவ மையமாக மாற்றியதாகவும், வல்லபியின் மன்னர் தர்சேன் IV இரண்டாவது கோவிலை கட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பீம் தேவ், ஜெய்பால், ஆனந்த்பால் உள்ளிட்ட அரசர்கள் படையெடுப்புகளுக்கு எதிராக நாகரிகத்தின் மரியாதையை காத்தவர்கள் என அவர் பாராட்டியுள்ளார். ராஜா போஜும் கோவிலை மீண்டும் கட்ட உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கரண் தேவ், சித்தராஜ் ஜெய்சிம்ஹா, குமார் பால் சோலங்கி உள்ளிட்டோர் குஜராத்தின் அரசியல் மற்றும் கலாசார வலிமையை மீட்டெடுத்ததாகவும் கூறியுள்ளார்.

1947ல் சர்தார் பட்டேலின் உறுதி

1940களில் இந்தியா முழுவதும் சுதந்திர உணர்வு பரவியிருந்த காலத்தில், Sardar Vallabhbhai Patel சோம்நாத் கோவிலின் நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

1947 நவம்பர் 13ஆம் தேதி தீபாவளி தினத்தில், கோவிலின் சேதமடைந்த இடிபாடுகளின் அருகே நின்று, “சோம்நாத் கோவில் மீண்டும் கட்டப்பட வேண்டும்” என்று சர்தார் பட்டேல் உறுதியெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1951ல் கோவில் திறப்பு விழா

சர்தார் பட்டேலின் அழைப்பை தொடர்ந்து குஜராத் மக்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்த மக்கள் உற்சாகமாக ஆதரவு அளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால், கோவில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டதை காணும் முன்பே சர்தார் பட்டேல் மறைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் கே.எம். முன்ஷி இந்த பணியை முன்னெடுத்து சென்றதாகவும், 1951ஆம் ஆண்டு கோவில் கட்டுமானம் நிறைவடைந்தபோது அந்நாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் திறப்பு விழாவில் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். அந்நாள் பிரதமர் நேரு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், டாக்டர் ராஜேந்திர பிரசாத் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது வரலாற்று சிறப்புமிக்க தருணமாக அமைந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

2001 நினைவுகளை பகிர்ந்த பிரதமர்

2001ஆம் ஆண்டு அக்டோபரில் குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அதே ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சோம்நாத் கோவில் திறக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நினைவுகளையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் L. K. அத்வானி ஆகியோரும் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1951 மே 11ஆம் தேதி பேசிய டாக்டர் ராஜேந்திர பிரசாத், “அசைக்க முடியாத நம்பிக்கையும் அன்பும் கொண்ட எந்த ஒன்றையும் அழிக்க முடியாது என்பதை சோம்நாத் கோவில் உலகுக்கு உணர்த்துகிறது” என்று கூறியிருந்ததை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், “சோம்நாத் கோவிலின் மறுகட்டமைப்பு சர்தார் பட்டேலின் கனவு நிறைவேற்றப்பட்டதைக் குறிக்கிறது. அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கையில் மீண்டும் வளமும் செழிப்பும் திரும்ப வேண்டும் என்பதையும் அது நினைவூட்டுகிறது” என டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறியிருந்ததை பிரதமர் மோடி தனது கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

Follow Us