வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு – பிரதமர் மோடி முக்கிய உத்தரவு
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் சூழல் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் சூழல் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். மேலும் போர் சூழல் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மாலுமிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அவசர உதவி, மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள சிறப்பு அமைப்பை உருவாக்க அறிவுறுத்தினார்.
பிரதமர் தலைமையில் அமைச்சரவை பாதுகாப்புக் குழு கூட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் மற்றும் அது தொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஜூலை 30, 2026 இன்று கூடியது. இந்த பிரச்னை தொடர்பாக நடைபெற்ற நான்காவது சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். தற்போதைய புவிசார் அரசியல் சூழல் குறித்து அமைச்சரவைச் செயலாளர் இக்குழுவிடம் விளக்கமளித்தார். எல்என்ஜி, எல்பிஜி மற்றும் உரங்கள் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்.
எல்பிஜி கொள்முதல் செய்வதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே பல்வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முக்கிய பெட்ரோலியப் பொருட்களின் ஒட்டுமொத்த இருப்பு மற்றும் விநியோக நிலை திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கச்சா எண்ணெய் தடையின்றி கிடைப்பதால், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீதத்திற்கும் அதிகமான திறனில் இயங்க முடிகிறது.
இது பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலியப் பொருட்களின் தடையற்ற உற்பத்தியை உறுதி செய்கிறது. குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பிஎன்ஜி இணைப்புகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரித்துள்ளது.
தேசிய எரிவாயு கட்டமைப்பு விரிவாக்கம், எல்என்ஜி இறக்குமதி மற்றும் மறுவாயுவாக்க உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நகர எரிவாயு விநியோக வலைப்பின்னல்களை விரிவுபடுத்துதல் மற்றும் ‘குழாய் உள்கட்டமைப்பு ஆணை, 2026’-ன் கீழ் குழாய் பதிப்பு மற்றும் இறுதி இணைப்புக்கான அனுமதிகளை உரிய நேரத்தில் வழங்குதல் ஆகியவற்றின் மூலம், தொழில்துறை பயன்பாட்டிற்கான எல்பிஜி மாற்றீட்டு நடவடிக்கைகளை அரசுகள் சுமூகமாக ஒருங்கிணைத்து வருகின்றன.