Miss World 2025 : உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசதா – பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
Miss World 2025 : 72வது உலக அழகி போட்டியில் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசதா உலக அழகி பட்டம் வென்றார். அவருக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முன்னதாக இந்தியா சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நந்தினி குப்தா கடைசி கட்டத்தில் வாய்ப்பை இழந்தார்.

சென்னை, மே 31 : கடந்த பல மாதங்களாக நீடித்த 72வது உலக அழகி (Miss World 2025) போட்டி பிரமாண்டமாக முடிவுக்கு வந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் (Hyderabad) மே 31, 2025 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாய்லாந்து நாட்டு அழகி ஓபல் சுசதா சவுங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri) உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் ஆகியோர் உலக அழகி இறுதி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் மொத்தம் 108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஸ் இந்தியா நந்தினி குப்தாவால் முதல் 8 இடங்களுக்குள் கூட வர முடியவில்லை. மிஸ் வேர்ல்ட் வெற்றியாளருக்கு ரூ.8 கோடியே 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
இந்த உலக அழகி போட்டியில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் நடன நிகழ்ச்சி ஹைலைட்டாக அமைந்தது. இந்தோனேசியா அழகி மோனிகா கெஜியா, ‘பியூட்டி வித் பர்பஸ்’ (Beauty with Purpose) என்ற பிரிவில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதா ரெட்டி மிஸ் வேர்ல்ட் பியூட்டி வித் பர்பஸின் பிராண்ட் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்த நிகழ்வில் பிரபல நடிகர் சோனு சூட் மனிதாபிமான விருதை திரைப்பட நடிகர் ராணாவின் கைகளிலிருந்து பெற்றார்.
உலக அழகி போட்டியில் வென்ற தாய்நாட்டை சேர்ந்த ஓபல் சுசதா
Thailand’s Opal Suchata Chuangsri crowned Miss World 2025 after grand finale in Hyderabad
— Press Trust of India (@PTI_News) May 31, 2025
கடைசி கட்டத்தில் வாய்ப்பை இழந்த நந்தினி குப்தா
View this post on Instagram
ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த நந்தினி குப்தா, மிஸ் வேர்ல்ட் 2025 இல் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டார். அவர் முதல் 20 போட்டியாளர்கள் வரை போட்டியில் பங்கேற்றார். ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் ஐந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் 20 போட்டியாளர்களின் பட்டியலை உருவாக்கினர். இதில் நந்தினி குப்தா ஆசிய கண்டத்தின் முதல் 5 போட்டியாளர்களில் ஒருவரானார். ஆனால் அதன் பிறகு, அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆசியாவின் முதல் 2 போட்டியாளர்களுக்குள் நந்தினி குப்தா இடம் பெறத் தவறிவிட்டார். இதனால் போட்டியில் இருந்து விலக வேண்டியதாயிற்று.
அவர் உலக அழகி என்ற கிரீடத்தை தலையில் அணிய வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் விருப்பமாக இருந்தது, ஆனால் நந்தினியின் கனவுடன் சேர்ந்து, இந்தியர்களின் கனவும் தகர்ந்து போனது. இந்தியா இதுவரை 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளது. கடந்த 1966 ஆம் ஆண்டு ரீட்டா ஃபாரியா என்பவர் முதன்முதலில் இந்தப் பட்டத்தை வென்றார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 1994 இல், ஐஸ்வர்யா ராய் உலக அழகியானார். அதன் பிறகு, டயானா ஹைடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் வெற்றி பெற்றனர்.