எல்பிஜி தட்டுப்பாடு.. ரயில்வே கேட்டரிங் பாதிக்கப்படுமா? நிலமை என்ன?
சமையல் எரிவாயு பற்றாக்குறை நிலைமை காரணமாக பயணிகளுக்கான உணவு சேவைகளில் தடையில்லாமல் இருக்க ஐஆர்சிடிசி முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள கேட்டரிங் யூனிட்கள் மற்றும் உணவகங்களுக்கு முக்கிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. மைக்ரோவேவ் மற்றும் இன்டக்ஷன் குக்கர்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 11, 2026: கல்ஃப் நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் தாக்கம் காரணமாக அங்கிருந்து வர வேண்டிய விநியோகம் பாதிக்கப்பட்டதால், நாட்டில் எரிவாயு பற்றாக்குறை கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஹோட்டல்கள், உணவகங்கள் மீது பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ரயில்வே கேட்டரிங் சேவைகளிலும் இதன் தாக்கம் காணப்படுகிறது. ரயில்களில் பயணிகளுக்கு ரயில்வே துறை புதியதாக சமைத்த உணவுகளை வழங்கி வருகிறது. ஆனால் எரிவாயு பற்றாக்குறை காரணமாக உணவு தயாரிப்பில் எதிர்மறை தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கேட்டரிங் சேவைகளை சில நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவது குறித்து ரயில்வே துறை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து ரயில்வே வாரியம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உணவையும் முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயிலிலேயே புதியதாக சமைத்த உணவு வழங்கப்படுகிறது. கேட்டரிங் சேவைகள் நிறுத்தப்பட்டால், உணவு முன்பதிவு செய்தவர்களுக்கு ஐஆர்சிடிசி பணத்தை திருப்பி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிலிண்டர் சிக்கல்.. அமலானது அத்தியாவசிய பொருட்கள் சட்டம்.. இனி என்ன நடக்கும்?
கேட்டரிங் சேவைகள் நிறுத்தப்படுமா?
ரயில்வே பயணிகளுக்காக வழங்கப்படும் உணவு ஐஆர்சிடிசி அடிப்படை சமையலறைகளில் தயாரிக்கப்படுகிறது. பின்னர் அவை பாண்ட்ரி கார்கள் மூலம் ரயில்களுக்கு அனுப்பப்படுகின்றன. தினமும் ஐஆர்சிடிசியின் அடிப்படை சமையலறைகள் மற்றும் ஆன்-போர்டு கேட்டரிங் அமைப்புகள் மூலம் நாடு முழுவதும் சுமார் 17 லட்சம் உணவுகள் வழங்கப்படுகின்றன.
எல்பிஜி எரிவாயு விநியோகம் இதேபோல் பாதிக்கப்பட்டால் கேட்டரிங் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என ஐஆர்சிடிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்பிஜி கிடைப்பதில் தடைகள் ஏற்பட்டால் உணவு தயாரிப்பு மற்றும் ரயில்களுக்கு விநியோகம் பாதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். பயணிகள் ஏற்கனவே உணவு முன்பதிவு செய்திருந்தால், அதற்கான தொகை திருப்பி வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே எரிவாயு பற்றாக்குறை காரணமாக உலகம் முழுவதும் பல நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் வணிகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. அதேபோல் ரயில்வே துறையிலும் இதன் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை – மத்திய அமைச்சர் விளக்கம்
ரயில் நிலையங்களில் இன்டக்ஷன் அடுப்புகள்:
சமையல் எரிவாயு பற்றாக்குறை நிலைமை காரணமாக பயணிகளுக்கான உணவு சேவைகளில் தடையில்லாமல் இருக்க ஐஆர்சிடிசி முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள கேட்டரிங் யூனிட்கள் மற்றும் உணவகங்களுக்கு முக்கிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
மைக்ரோவேவ் மற்றும் இன்டக்ஷன் குக்கர்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் கூறப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் உள்ள கேட்டரிங் யூனிட்கள் தயாராக உடனே சாப்பிடக்கூடிய (Ready-to-Eat) உணவுகளை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு உணவு மற்றும் பானங்களின் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் உள்ள கேட்டரிங் யூனிட்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் இந்த உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் உள்ள ஜன் ஆஹார் போன்ற உணவகங்களில் வழக்கமான சேவைகள் தொடரும் வகையில் ஐஆர்சிடிசி நடவடிக்கை எடுத்துள்ளது.