சந்தூர் இசைத்து அசத்திய ஜப்பான் பிரதமர்.. இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ..
இந்திய - ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பிரதமர் தகாய்ச்சிக்கு மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக விருப்பம் இருப்பதாக அறிந்தேன். இந்தியாவில் தயாரிக்கப்படும் யமஹா, கவாசாகி, ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜப்பானின் தொழில்நுட்ப திறனும், இந்தியாவின் வேகமும், உற்பத்தித் திறனும் இணையும் போது உலகமே பயனடையும்" என்று தெரிவித்தார்.
ஜூலை 3, 2026: இந்திய – ஜப்பான் உச்சி மாநாட்டையொட்டி, ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இந்திய பாரம்பரிய இசைக்கருவியான சந்தூர் இசைக்க முயன்ற நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “இந்திய இசையை முயற்சிக்கும் பிரதமர் சனே தகாய்ச்சி” என்ற வாசகத்துடன் அவர் வெளியிட்ட இந்த காணொளி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்திய – ஜப்பான் ஆண்டு உச்சி மாநாடு, இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் இந்திய – ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர், பிரதமர் மோடி ஏற்பாடு செய்த கலாச்சார மதிய விருந்தில் சனே தகாய்ச்சி கலந்து கொண்டார்.
இந்திய இசை கருவியை வாசித்த ஜப்பான் பிரதமர்:
View this post on Instagram
அப்போது, இந்திய பாரம்பரிய இசைக்கருவிகளில் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியின் இறுதியில், கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்த சனே தகாய்ச்சியை, சந்தூர் கருவியை இசைத்துப் பார்க்குமாறு இசைக் கலைஞர்கள் அழைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர், சந்தூரில் சில இசைக் குறிப்புகளை இசைத்தார். இதனை பிரதமர் மோடி புன்னகையுடன் கைத்தட்டி பாராட்டியதோடு, அங்கு இருந்தவர்களும் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்களையும், பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட தருணங்களையும் சனே தகாய்ச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் வேகமும், ஜப்பானின் உற்பத்தித் திறனும் – பிரதமர் மோடி உரை:
இதனிடையே, இந்திய – ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “பிரதமர் தகாய்ச்சிக்கு மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக விருப்பம் இருப்பதாக அறிந்தேன். இந்தியாவில் தயாரிக்கப்படும் யமஹா, கவாசாகி, ஹோண்டா மோட்டார் சைக்கிள்கள் உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜப்பானின் தொழில்நுட்ப திறனும், இந்தியாவின் வேகமும், உற்பத்தித் திறனும் இணையும் போது உலகமே பயனடையும்” என்று தெரிவித்தார்.
இந்திய – ஜப்பான் உச்சி மாநாட்டின் போது, ஹரியானாவின் கார்கோடாவில் அமைக்கப்பட்டுள்ள மாருதி சுசுகியின் நான்காவது உற்பத்தி ஆலையை இரு பிரதமர்களும் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
இந்தியா – ஜப்பான் ஒப்பந்தம்:
மேலும், உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சனே தகாய்ச்சியை தனது “தங்கை” என்று குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த சனே தகாய்ச்சியும், “சகோதரன் – சகோதரியாக இந்திய – ஜப்பான் உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இரு தலைவர்களும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான மற்றும் திறந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பிரதமர் மோடி முன்வைத்துள்ள “மஹாசாகர்” திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் ஒப்புக் கொண்டனர். பாதுகாப்புத் துறையில் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பின் அடிப்படையில் இருநாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதார பாதுகாப்பு, ஆற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளன.
மேலும், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் அடுத்த தலைமுறை போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் புதிய ஜப்பானிய முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், அடுத்த பத்து ஆண்டுகளில் 10 டிரில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 62 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீட்டை இந்தியாவில் ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளும் இணைந்து முதல் முறையாக பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒத்துழைப்பு, பிராந்திய அமைதி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை வலுப்படுத்த உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.