13 வயது சிறுமியை 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த குடும்பம்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
Shocking Child Marriage In Madhya Pradesh | குழந்தை திருமணங்களை தடுக்க அரசு பல வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூர், மே 21 : மத்திய பிரதேச (MP – Madhya Pradesh) மாநிலம், இந்தூரில் (Indoor) 13 வயது சிறுமியை 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மணமகன் உட்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தை திருமணம் குறித்த சம்பவங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
42 வயது நபருக்கு 13 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த கொடூரம்
சிறுமியின் தந்தை இறந்த பிறகு அவரது தாய் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இதன் காரணமாக, சிறுமி தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான், அந்த சிறுமியை 42 வயது நபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாத்தா முடிவு செய்துள்ளார். இந்த திருமணத்தில் அந்த 42 வயது மணமகனின் தந்தை, சிறுமியின் தாத்தாவிடம் ஒரு நிபந்தனை விதித்துள்ளார்.
இதையும் படிங்க : நீட் தேர்வை பாதுகாப்பாக நடத்த ஆய்வு கூட்டம் – போலி டெலிகிராம் சேனல்களை நீக்க உத்தரவு
அதாவது 13 வயது சிறுமியை தனது 42 வயது மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் மட்டுமே, தன் மகளை தாத்தாவின் பேரணுக்கு திருமணம் செய்து வைப்பேன் என்று கூறியுள்ளார். இந்த நிபந்தனைக்கு சிறுமியின் தாத்தா சம்மதம் தெரிவித்த நிலையில், ஏப்ரல் 25, 2026 திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மத்திய பிரதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையால் அமைக்கப்பட்ட பறக்கும் படை, நடவடிக்கை எடுக்கப்படும் என இரண்டு குடும்பங்களை எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க : ‘ரோமுக்கு நல்வரவு, நண்பரே’ – இத்தாலி சென்ற பிரதமர் மோடி.. செல்ஃபி வரவேற்பு கொடுத்த மெலோனி!
ஆனால், அதற்கு பிறகும் அவர்கள் சிறுமியை அந்த 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு சிறுமி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு பிறகு மாமியார் வீட்டிற்கு செல்லும்படி சிறுமியை அவரது குடும்பத்தார் கட்டாயப்படுத்தி தாக்கவும் செய்துள்ளனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குழந்தை திருமணம் தடை சட்டத்தின் கீழ், மணமகன், அவரது உறவினர்கள், சிறுமியின் தாத்தா, பாட்டி உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.