இந்தியா முழுவதும் நாளை 12.5 லட்சம் மருந்தகங்கள் செயல்படாது!
12.5 Lakhs Pharmacies To Shut Down On May 19 2026 | கொரோனா காலக்கட்டத்தில் e-pharmacy-க்கு அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சுமார் 12.5 லட்சம் மருந்தகங்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
டெல்லி, மே 19 : ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (மே 20, 2026) மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் போராட்டத்தை அரிவித்துள்ளனர். இதன் காரணமாக நாளை, இந்தியா முழுவதும் உள்ள சுமார் 12.5 லட்சம் மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில், மருந்தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தல்
கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு மருந்து கிடைப்பதை உறுதி செய்ய, வீடுகளுக்கே சென்று மருந்துகளை விநியோகம் செய்யும் e-pharmacy செயல்பாட்டுக்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது. அந்த முறை தற்போது வரை அமலில் உள்ளது. இந்த நிலையில், முறையான மருந்து சீட்டு மற்றும் சரிபார்ப்பு இன்றி ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும், ஆன்லைன் மூலம் மருத்துவரின் பரிந்துறை சீட்டுகள் இல்லாமலும் வலி நிவாரணிகள், தூக்க மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மருந்துகள் ஆகியவை எளிதாக கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க : உயிர் பறிக்கும் நஞ்சா மாம்பழம்? 5 வயது சிறுவன் பலி, இருவர் மருத்துவமனையில் அனுமதி!




எனவே, கொரோனா காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட இந்த e-pharmacy-க்கான அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று AIOCD (All India Organization of Chemists and Druggist) அமைப்பு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இந்த போராட்டத்தின் விளைவாக நாளை இந்தியா முழுவதும் உள்ள சுமார் 12.5 லட்சம் மருந்து கடைகள் இயங்காது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள 42,000 மருந்தகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில்லரை வணிகர்களை நேரடியாக பாதிப்பதாக குற்றச்சாட்டு
ஆன்லைன் மருந்து விற்பனையால் பொதுமக்களுக்கு மட்டுமன்றி வணிகர்களுக்கு பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கார்பரேட் மருந்தகங்கள் வழங்கும் அதிக தள்ளுபடிகள் காரணமாக உள்ளூர் சில்லறை மருந்துக்கடைகளால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லை என்றும், அது சிறு வணிகர்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் மிக கடுமையாக பாதிப்படைய செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், நாளை அத்தியாவசிய தேவைகளுக்கு மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.