கண்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்
Eye Symptom Alert : சிலருக்கு தூங்கி எழுந்ததும் கண்களில் வீக்கம் காணப்படும். இது தூக்கமின்மை பிரச்னையால் ஏற்படுவதாக பலரும் நினைக்கிறார்கள். இந்த நிலையில் கண்களில் வீக்கம் அடிக்கடி ஏற்பட்டால் அது சிறு நீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது, சிலருக்கு கண்களைச் (Eyes) சுற்றி வீக்கம் ஏற்படும் பிரச்னை இருக்கும். பெரும்பாலும் தூக்கமின்மை, அல்லது அதிகமாக தூங்குவது, அதிக நேரம் அழுது சோர்வாக இருப்பது போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அது அப்படியல்ல. இந்த அறிகுறி நீண்ட காலமாக நீடித்தால், அது உங்கள் உடலில் மறைந்திருக்கும் ஏதேனும் கடுமையான நோயின் அறிகுறியாகவும் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. கண்களில் காணப்படும் இந்த வீக்கம் சிறுநீரக (Kidney) செயலிழப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. இந்த கட்டுரையில் தூங்கி எழுந்ததும் கண்களில் வீக்கம் ஏற்படுவற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
கண்களுக்குக் கீழும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிலருக்கு வீக்கம் ஏற்படுகிறது. இந்த வீக்கம் சில நேரங்களில் லேசானதாக இருக்கும். ஆனால் சிலருக்கு இது தொடர்ந்து அதிகரிக்கும். இது ஒரு சாதாரண பிரச்னையாக கருதி மக்கள் அதனை கிரீம்கள் அல்லது சில வீட்டு வைத்தியங்கள் மூலம் அதை அகற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த அறிகுறி உடலில் நீர் தேக்கம் மற்றும் புரத கசிவின் அறிகுறியாக இருக்கலாம். இது சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப கட்டமாகும்.
ஆராய்ச்சி என்ன சொன்னது?
தி லான்செட் மருத்துவ இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, கண்களில் தொடர்ந்து வீக்கம், குறிப்பாக காலையில் எழுந்த பிறகு, அது தொடர்ந்தால், உங்கள் சிறுநீரகங்கள் உடலில் இருந்து புரதங்களை வடிகட்டத் தவறிவிட்டன என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு இரத்தத்தை சுத்தம் செய்து, அதிலிருந்து அதிகப்படியான நீர் மற்றும் நச்சு கூறுகளை அகற்றுவதாகும். ஆனால் சிறுநீரகம் சரியாக செயல்படாதபோது, புரதம் சிறுநீரின் வழியாக வெளியேறி, உடலில் நீர் தேங்கத் தொடங்குகிறது. அதன் முதல் விளைவு கண்கள் மற்றும் முகத்தில் தெரியும்.
சிறுநீரக பாதிப்பின் பிற அறிகுறிகள்
சிறுநீரக செயலிழப்பை பல அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம் என்று சுகாதார நிபுணர் டாக்டர் சமீர் கூறுகிறார். மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால், அது முதலில் கண்களில் தெரியும். உங்கள் கண்களில் வீக்கம் தொடர்ந்தால், உடலில் உள்ள மற்ற சமிக்ஞைகளுக்கும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இது தவிர, அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறிப்பாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு மற்றும் பலவீனம், பசியின்மை, பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம், முகத்தில் வெளிர் நிறம் அல்லது கண்களுக்குக் கீழே கருவளையம் போன்ற பல பொதுவான அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளில் ஏதேனும் காணப்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது, அதே நேரத்தில் உப்பு அல்லது புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்பவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது. குறைவாக தண்ணீர் குடித்தல், புகைபிடித்தல் அல்லது அதிகமாக மது அருந்துதல் அல்லது குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக நோய் வரலாறு இருந்தால் சிறுநீரக நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்.
கண்களில் தொடர்ந்து வீக்கம் இருந்தால் என்ன செய்வது?
உங்கள் கண்களுக்குக் கீழே தொடர்ந்து வீக்கம் ஏற்பட்டால், மேலே குறிப்பிட்டுள்ள வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும். ஒரு எளிய சிறுநீர் பரிசோதனை மூலம் உங்கள் சிறுநீரில் புரதத்தின் அளவு அதிகமாக உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். இது தவிர, இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனை (KFT) மூலமாகவும் இந்த நிலையைத் தெளிவுபடுத்த முடியும்.
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
தினமும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும், உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும், உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்து, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருங்கள். வருடத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.