சமையலறைகளில் துருப்பிடித்த மற்றும் உடைந்த கத்திகளைப் பயன்படுத்தத் தடை
Food safety: உணவகங்களின் சமையலறைகளில் துருப்பிடித்த, உடைந்த அல்லது சேதமடைந்த கத்திகள் மற்றும் பிளேடுகளைப் பயன்படுத்துவதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடுமையான தடையை விதித்துள்ளது. தூய்மை விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம் விதிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், உணவுப் பாதுகாப்புத் துறை தங்களது விதிமுறைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிகள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கேட்டரிங் சேவைகளுக்கு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, சமையல் அறைகளில் துருப்பிடித்த, உடைந்த, விரிசல் விழுந்த அல்லது சேதமடைந்த கத்திகள் மற்றும் பிளேடுகளைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் சமையல் உபகரணங்கள் எப்போதும் தூய்மையாகவும், நச்சுத்தன்மையற்றதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் என்று இந்த ஆணையம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
துருப்பிடித்த கத்திகளால் ஏற்படும் உடல்நலக் கேடுகள்
பலரும் கத்திகளில் ஏற்படும் துருவை ஒரு சாதாரண வெளிப்புறக் குறையாகவே பார்க்கிறார்கள். ஆனால், அது கடுமையான ஆரோக்கியக் கேடுகளை விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கத்திகளின் உலோகம் துருப்பிடிக்கும் போது, அதன் மேற்பரப்பு சொரசொரப்பாகவும், நுண்துளைகள் நிறைந்ததாகவும் மாறிவிடுகிறது. இந்த நுண்துளைகளில் ஈரப்பதமும், உணவுத் துகள்களும் எளிதில் தேங்கிவிடும். இதனால், சால்மோனெல்லா (Salmonella) மற்றும் ஈ-கோலை (E. coli) போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் அங்கு அதிவேகமாக வளரத் தொடங்குகின்றன. சாதாரணக் கழுவுதல் மூலம் இந்த நுண்துளைகளுக்குள் இருக்கும் கிருமிகளை முழுமையாக நீக்க முடியாது. இத்தகைய கத்திகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, கிருமிகள் உணவில் பரவி, நுகர்வோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) மற்றும் கடுமையான வயிற்றுத் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன.
உடைந்த உபகரணங்களால் நேரும் ஆபத்துகள்
பாக்டீரியா தொற்றுகள் மட்டுமின்றி, சேதமடைந்த கத்திகளால் பிற ஆபத்துகளும் ஏற்படுகின்றன. சமையலின் போது உடைந்த கத்திகளின் சிறிய உலோகத் துண்டுகள் அல்லது உரிந்த பெயிண்ட்கள் எதிர்பாராதவிதமாக உணவோடு கலக்க வாய்ப்புள்ளது. இந்த இரும்புத் துகள்கள் மனித உடலுக்குள் சென்றால், அது உள் உறுப்புகளில் காயங்களை ஏற்படுத்தலாம் அல்லது பற்களைச் சேதப்படுத்தலாம். சமையல் உபகரணங்களை முறையாகப் பராமரிக்காதது, நுகர்வோரை வேதியியல் மற்றும் உடல்ரீதியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்குகிறது என்று எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சுட்டிக்காட்டியுள்ளது. 2011-ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி, உணவோடு தொடர்பு கொள்ளும் பாத்திரங்கள் தரமான பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு வணிகங்கள் பின்பற்ற வேண்டிய கடமைகள்
இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து உணவு நிறுவனங்களும் தங்களது சமையல் கருவிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் கத்திகளில் துருவோ அல்லது சேதமோ கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு புதிய கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். கத்திகளைப் பயன்படுத்திய பிறகு ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவதும், உலர்ந்த இடங்களில் சேமிப்பதும் அவசியமாகும். மேலும், சமையலறை ஊழியர்களுக்குத் தூய்மை மற்றும் உபகரணப் பராமரிப்பு குறித்த பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றும், இதற்கான துப்புரவுப் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.