தெலுங்கு சினிமா குறித்து மனம் நெகிழ்ந்து பேசிய துல்கர் சல்மான்!
Actor Dulquer Salmaan: மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகர் துல்கர் சல்மான். குறிப்பாக தெலுங்கு சினிமா குறித்து நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் மம்முட்டியின் மகன் தான் நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan). வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆனாலும் தனது திறமையால் தனக்கு என்று சினிமா துறையில் ஒரு இடத்தை மிகவும் உறுதியாக பிடித்துவிட்டார் நடிகர் துல்கர் சல்மான். இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மானுக்கு சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் அவர் நடித்த லக்கி பாஸ்கர் (Lucky Baskhar) படத்திற்காக விருது ஒன்றை அந்த அரசு அறிவித்தது. மேலும் முன்னதாக இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான படமும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்தப் படத்திற்கும் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இது குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கு சினிமா குறித்து பேசியது என்ன?
நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளதாகவது, தெலுங்கு சினிமாவில் எனது பயணம் அசாதாரணமானது. காலத்தால் அழியாத கதைகளைச் சொல்லும் மிக அற்புதமான குழுக்களைக் கண்டுபிடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. மேலும் இந்த கதாப்பாத்திரங்களில் நடிக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.




மேலும் தெலுங்கு சினிமாவில் நான் நடித்த ஒவ்வொரு படமும் அங்கீகரிக்கப்படுவதையும், கிட்டத்தட்ட அனைத்து படங்களும் அந்தந்த ஆண்டுகளில் சிறந்த படத்திற்கான விருதை வெல்வதையும் பார்ப்பது என்னால் வார்த்தைகளில் விவரிக்கவோ முடியாத ஒரு உணர்வு என்று மிகவும் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஸ்ரீ ரேவந்த்காரு, தெலுங்கானா அரசு, மதிப்பிற்குரிய நடுவர் குழு, ஒவ்வொரு படத்திலும் என்னுடன் நடிக்கும் சக நடிகர்கள் குழு, டெக்னிஷியன்ஸ் மற்றும் படக்குழுவினர் மற்றும் உலகெங்கிலும் உள்ள எனது அற்புதமான தெலுங்கு ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வைரலாகும் நடிகர் துல்கர் சல்மானின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
நீங்கள் என்னை நடிகராக ஏற்றுக்கொண்டதற்கும் என்னை சிறந்த நடிகர் என்று அங்கீகரித்து பாராட்டியதற்கு நான் தினமும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்பாராதவிதமாக இந்த விருது வழங்கும் நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
அந்த விருது வழங்கும் விழாவில் ஒரு பகுதியாக இருப்பதை தவறவிட்டது மிகவும் வருத்தத்திற்கு உரிய ஒன்று என்று தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும் இறுதியாக நாகி, ஸ்வப்னா, பிரியங்கா, ஹனு சர் மற்றும் வெங்கி ஆகியோர் நான் இல்லாதபோது எனது விருதைப் பெற்றிருப்பது சிறப்பான விசயமாக கருதுகிறேன் என்றும் நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.