நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல்.. சந்திரமுகி படக்காட்சிகளை நீக்கக்கோரி வழக்கு..
Nayanthara Biography: நயன்தாரா ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்க வேண்டும், படத்திலிருந்து ஈட்டிய லாப கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அக்டோபர் 6ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 10, 2025: நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பதில்மனு தாக்கல் செய்ய ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோவிற்கு 2025, அக்டோபர் 6 வரை அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் வாழ்க்கை மற்றும் தொழில்முறை பயணத்தை வெளிப்படுத்தும் இந்த ஆவணப்படத்தை, டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்தது. இது 2024 நவம்பர் மாதத்தில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் நானும் ரவுடிதான் படக் காட்சிகளை பயன்படுத்தியதாகக் கூறி, நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி பெறாமல் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ரூ. 5 கோடி இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு:
அந்த மனுவில், ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்க வேண்டும், படத்திலிருந்து ஈட்டிய லாப கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், இத்தகவல் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியிருந்தாலும், ஆவணப்படத்தில் காட்சிகள் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பதில் மனு தாக்கல் செய்ய அக்டோபர் 6 வரை அவகாசம்:
வழக்கு விசாரணை நீதிபதி செந்தில்குமார் முன் நடைபெற்றது. அப்போது, இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என டார்க் ஸ்டூடியோ தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில், இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை என்றும், பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, பதில்மனு தாக்கல் செய்ய டார்க் ஸ்டூடியோவிற்கு அக்டோபர் 6 வரை அவகாசம் வழங்கி, நீதிபதி விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.