தெலுங்கு திரையுலகில் சோகம்.. நடிகர் ஷோபன் பாபுவின் மனைவி சாந்தகுமாரி காலமானார்
Actor Shoban Babu Wife Demise: சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சாந்தகுமாரியின் மறைவு செய்தி வெளியாகியதும், தெலுங்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு ஜூலை 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை நகரில் நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஜூலை 10, 2026: தெலுங்கு திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில், மறைந்த நடிகர் ‘நடபூஷண்’ ஷோபன் பாபுவின் மனைவி சாந்தகுமாரி காலமானார். அவருக்கு வயது முதிர்வு காரணமான உடல்நலக் குறைபாடுகள் இருந்து வந்த நிலையில், சென்னையி. உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஷோபன் பாபு மனைவி மறைவு:
சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சாந்தகுமாரியின் மறைவு செய்தி வெளியாகியதும், தெலுங்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு ஜூலை 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை நகரில் நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஷோபன் பாபு மற்றும் சாந்தகுமாரி ஆகியோரின் திருமணம் 1958-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
ஷோபன் பாபு கடந்து வந்த பாதை:
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிய ஷோபன் பாபு, குடும்பக் கதைகள் மற்றும் காதல் திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர். இயல்பான நடிப்பு, கம்பீரமான தோற்றம் மற்றும் குடும்ப ரசிகர்களின் பேராதரவால் பல தசாப்தங்களாக தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தார்.
திரைத்துறையின் உச்சத்தில் இருந்தபோதும், கதாநாயகன் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்ற தனது கொள்கையில் உறுதியாக இருந்த ஷோபன் பாபு, பின்னாளில் பல முக்கிய திரைப்பட வாய்ப்புகளையும் ஏற்காமல் விலகினார். தனது நடிப்பாலும், எளிமையான வாழ்க்கை முறையாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த அவர், 2008-ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்.
தற்போது, அவரது மனைவி சாந்தகுமாரியின் மறைவு, ஷோபன் பாபுவின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மீண்டும் ஒரு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.