முதல் படம் செம ஹிட்.. இரண்டாவது படத்துக்கு 11 ஆண்டுகள் இடைவெளி.. மீண்டும் களமிறங்கும் தெகிடி இயக்குனர்!
Actor Ashok Selvan: தமிழ் சினிமாவில் தற்போது மக்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் உள்ளார். ஆனால் இதற்கு எல்லாம் காரணம் இவர் முன்னதாக நடித்தப் படங்களின் வெற்றிதான். அந்த வரிசையில் முதலில் இவரது வெற்றிப் படமாக இருப்பது தெகிடி என்றே சொல்லலாம்.

நடிகர் அசோக் செல்வன் (Actor Ashok Selvan) தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் இந்தப் படத்தின் நாயகன்களாக நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கடந்த 24-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் படத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் குறித்தும் தனித் தனியாக புகழ்ந்து பேசினார். அப்போது அசோக் செல்வன் குறித்து பேசும் போது நடிகர் நாசருடன் ஒப்பிட்டு அவரை மாதிரி நல்ல திறமையான நடிகர் என்று தெரிவித்தார். நடிப்பில் அசோக் செல்வனுக்கு இருக்கும் ஆர்வம் குறித்தும் திறமை குறித்தும் வெகுவாகப் பாராட்டினார்.
அசோக் செல்வனின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
தெகிடி இயக்குநருடன் மீண்டும் கைகோர்க்கும் அசோக் செல்வன்:
இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வனின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 2013-ம் ஆண்டு இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் அசோக் செல்வன்.
அதனைத் தொடர்ந்து பீட்சா 2 படத்தின் நாயகனாக நடித்தார். மேலும் அசோக் செல்வன் நாயகனாக நடித்த இரண்டாவது படம் தான் தெகிடி. இந்தப் படத்தை இயக்குநர் ரமேஷ் இயக்கி இருந்தார். 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படம் வித்யாசமான கதையம்சத்தை கொண்டிருந்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த தெகிடி படத்திற்கு பிறகு இயக்குநர் ரமேஷ் எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்தார். சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் படம் இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குநர் ரமேஷ். அதன்படி ரமேஷ் இயக்க உள்ள இந்தப் படத்திற்கு அசோக் செல்வன் நாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.