தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்.. வேலூர் புறப்பட்டார் விஜய்.. சாலை மார்க்கமாக 140 கிமீ பயணம்!
Vellore Tvk Meeting: வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலமாக புறப்பட்டு சென்றார். அங்கு பிற்பகல் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.

சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டார் விஜய்
வேலூர் மாவட்டம், அகரஞ்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று திங்கள்கிழமை மதியம் 12 மணியளவில் ( பிப்ரவரி 23) நடைபெறுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் கடந்த 20 நாட்களாக கட்சியினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. முதலில் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் சந்திப்பு என பெயரிடப்பட்டு சுமார் 25 ஆயிரம் பேரை விஜய் சந்திக்க இருந்தார். ஆனால், அதற்கு சேலத்தில் நடைபெற்ற விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சியில் நிகழ்ந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 20- க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை சேலம் மாவட்ட காவல்துறை விதித்திருந்தது. இதனை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. இதில், நிழல் பந்தல்கள் அமைக்க வேண்டும், இருக்கைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருந்தது.
170 அடி நீளத்தில் பிரம்மாண்ட பந்தல்
அதன்படி, வேலூரில் 170 அடி நீளம் மற்றும் 140 அடி அகலத்தில் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 4,900 நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கும் சென்னையில் இருந்து கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், அந்த அட்டையை வைத்திருக்கும் நபர்களை மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: பெரம்பூரில் போட்டியிடும் விஜய்? ஆதவ் அர்ஜூனா தகவல் – தவெக கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானம்
சாலை மார்க்கமாக வேலூர் புறப்பட்டார் விஜய்
அதன்படி, வேலூரில் அகரஞ்சேரி என்ற பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் பந்தல் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம், இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக, அவர் சென்னையில் தனது வீட்டில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக வேலூருக்கு புறப்பட்டு சென்றார். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை வழியாக சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவு கடந்து வேலூரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு செல்ல உள்ளார்.
மாற்று பாதை வழியாக அழைத்து செல்லப்படும் விஜய்
இவரது வாகனம் பள்ளிக்குப்பம் சாலையில் சென்றால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை ஏற்படும் என்பதற்காக, சுமார் அரை கிலோ மீட்டருக்கு முன்பாக கொல்லமங்கலம் அல்லது விநாயகபுரம் வழியாக விஜயின் கார் செல்வதற்கு பிரத்தியேக வழியை கட்சியினர் அமைத்துள்ளனர். இதன் வழியாக விஜயின் வாகனம் வருகை தந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து சேரும். பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தாலும், தனது பிரச்சார வாகனத்தின் மேல் நின்றவாறு விஜய் பேச உள்ளார். இதற்காக ராணிப்பேட்டை எல்லையில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை சுமார் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: யாருடன் கூட்டணி.. ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு அவசர கூட்டம்.. முக்கிய அறிவிப்பு வெளியாகிறது?