சென்னை, மார்ச் 28, 2026: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்காதது தொடர்பாக புகார் அளிக்க தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், சென்னை தலைமைச் செயலகம் வந்திருந்தார். அங்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளித்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகியுள்ளது.
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு:
மார்ச் 28ஆம் தேதி, பெரம்பூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. குறுகிய இடம் என்பதும், அங்கு 3,000 பேருக்கு மேல் கூட முடியாது என்பதும் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுக – கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்ன? வெளியான பட்டியல்..
இதனைத் தொடர்ந்து, விஜய் தனது சமூக வலைதளப் பதிவில், திமுக அரசுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்றும், இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதல் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜய் புகார்:
அதனைத் தொடர்ந்து, இன்று சென்னை தலைமைச் செயலகம் சென்று, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளித்தார். மேலும், பிரச்சாரத்திற்கு உரிய அனுமதி வழங்க கோரி மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் வருகையால் தலைமைச் செயலகம் பரபரப்பாக இருந்தது. வரவிருக்கும் நாட்களில் தொடர்ந்து பிரச்சாரம் நடைபெற உள்ளதால், அதற்கான போதிய அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.