சிபிஐ அலுவலகமா? தவெக அலுவலகமா?… எங்கு செல்ல போகிறார் விஜய்!
Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்க உள்ள நிலையில், கட்சியின் தலைவர் விஜய் இதில் பங்கேற்கிறாரா அல்லது சிபிஐ அலுவலகத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், விஜய் என்ன முடிவெடுக்கப்போகிறார்.

வேட்பாளர் நேர்காணல்-சிபிஐ விசாரணை..விஜயின் முடிவு என்ன
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், கரூர் சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார், போக்குவரத்து போலீசார், விஜயின் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனர், அப்போதைய சட்டம் ஒழுங்கு ஏடிஜியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தியிருந்தனர். மேலும், கரூரில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு சம்பவம் நடந்த இடமான வேலுச்சாமிபுரத்திலும் விசாரணை நடத்தியிருந்தனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கடந்த ஜனவரி மாதம் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, 2 முறை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜராகினார்.
விஜய் பதில்-விசாரணை தகவல் இடையே முரண்பாடு
அவருடன், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். அவர்களிடம் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். இதில், விஜய் அளித்த பதில் மற்றும் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றில் கிடைத்த தகவல் ஆகியவை முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு வேண்டும்.. தவெக தலைவர் விஜய் தரப்பில் கோரிக்கை..
விசாரணையை 10 நாள்கள் ஒத்திவைக்க கோரி மனு
இதனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், தவெகவில் வேட்பாளர் நேர்காணல் இன்று தொடங்க உள்ள நிலையில், அதில் விஜய் பங்கேற்க இருப்பதால், இந்த விசாரணையை 10 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் எனவும், அதற்கு பின்னர் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
வேட்பாளர் நேர்காணலா அல்லது சிபிஐ விசாரணையா
இந்த கோரிக்கைக்கு தற்போது வரை சிபிஐ தரப்பிலிருந்து பதில் அளிக்கப்படவில்லை. இதனால், இன்று நடைபெற உள்ள வேட்பாளர் நேர்காணலில் விஜய் பங்கேற்கிறாரா அல்லது சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்ல உள்ளாரா என்ற விவரம் தெரியாத நிலை இருந்து வருகிறது. கட்சியில் விஜய் தலைமையில் வேட்பாளர் நேர்காணல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில், குறுக்கிட்ட சிபிஐ விசாரணையால் விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்.. உழைக்க நான் தயார்.. நீங்கள் தயாரா? முதல்வர் ஸ்டாலின்..