“வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கவனமாக இருங்கள்”.. தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்..
Tamilnadu Assembly Election: மே 4ம் தேதி, இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை நமது தேர்தல் பணி தொடர வேண்டும். நமது தலைவர், கூட்டணித் தலைவர்கள் எல்லோரும் பல நாட்களாகப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இந்த கடும் உழைப்பின் பயனை, மகத்தான தேர்தல் வெற்றியாக நாம் அறுவடை செய்திட வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்..
Tamilnadu Polls 2026: தேர்தல் நாளின் கடைசி நிமிடம் வரை மிகுந்த விழிப்போடு பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்கள், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த அரசியல் தெளிவுடன் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். பாசிசத்தின் சூழ்ச்சிகளை எல்லாம் புரிந்து வைத்திருக்கிறார்கள். களம் உணர்த்திய செய்திகள் இவை.
மேலும் படிக்க: கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை.. நான் செய்த திட்டங்கள் எனக்காக ஓட்டுக்கேட்கும் – முதல்வர் ஸ்டாலின்..
அடிமைக் கூடாரமான அதிமுக:
தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் பாசிச சக்திகள் மீதும், அதற்கு பாதை அமைத்துக்கொடுக்கும் அடிமைக் கூடாரமான அதிமுக மீதும், எடப்பாடி பழனிசாமி மீதும் மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். பாசிஸ்ட்டுகளை எந்த அளவுக்கு தமிழ்நாடு எதிர்த்து நிற்கிறதோ, அதே அளவு பாசிஸ்ட்டுகளை தோளில் சுமந்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கும் பாடம் புகட்ட தமிழ்நாட்டு மக்கள் தயாராகிவிட்டார்கள்.
மு.க.ஸ்டாலின் ஆதரவு அலை:
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் காவல் அரணாக இருக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான மதிப்பு, மக்களிடையே பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. மாநிலம் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அலை வீசுகிறது. நமது திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல, நாம் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள், தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்றன.
விழிப்போடு பணியாற்ற வேண்டும்:
நாடாளுமன்றத்தில் நாம் பெற்ற சரித்திர வெற்றி, சட்டசபை தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும். மக்களிடம் இருக்கும் எழுச்சியைப் பார்க்கும்போது, 234 இடங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் வெல்லப் போகிறது. இந்த இலக்கினை நாம் அடைய, தேர்தல் நாளின் கடைசி நிமிடம் வரை மிகுந்த விழிப்போடு பணியாற்றிட வேண்டும்.
அதேபோல், மே 4ம் தேதி, இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை நமது தேர்தல் பணி தொடர வேண்டும். நமது தலைவர், கூட்டணித் தலைவர்கள் எல்லோரும் பல நாட்களாகப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இந்த கடும் உழைப்பின் பயனை, மகத்தான தேர்தல் வெற்றியாக நாம் அறுவடை செய்திட வேண்டும். அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நிர்வாகிகள், இளைஞர் அணி தம்பிகள் உட்பட அனைவரும் உழைத்திட வேண்டும்.
மீண்டும் ஒலிக்கட்டும்:
பாசிச சக்திகளையும் – அதிமுக அடிமைக்கூட்டத்தையும் நமது வாக்கு எனும் ஆயுதத்தால் வீழ்த்துவோம். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்ற தலைவரின் குரல் மீண்டும் ஒலிக்கட்டும். திராவிட மாடல் 2.0 மலரட்டும். நம் மண், மொழி, பண்பாட்டைப் பாதுகாத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.