கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளில் திமுக போட்டி?.. கூட்டணி கட்சிகளுக்காக தியாகம்.. பின்னால் பலே வியூகம்!!
Tamil Nadu Assembly Election: மதிமுக கடந்த முறை 6 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவிற்கு, இந்த முறை 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு தொகுதியில் மட்டும் கட்சியின் அங்கீகாரத்திற்காகத் தனிச் சின்னத்தில் போட்டியிட அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கோப்புப் புகைப்படம்
Tamil Nadu Polls 2026: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த முறை திமுக தனது தொகுதிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு, கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. திமுக தனது தொகுதிகளைக் குறைத்துக்கொள்ள முடிவெடுத்ததற்கு, கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சிகளே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: “டாப் கியரில் நாதக”.. முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்.. நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் சீமான்..
திமுகவில் புதிதாக இணைந்த 9 கட்சிகள்:
அவ்வாறு திமுக கூட்டணியில் புதிய வரவாக தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ (SDPI), கொங்கு இளைஞர் பேரவை, முக்குளத்தோர் புலிப்படை, மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சுமார் 9 புதிய கட்சிகள் இணைந்துள்ளன. இந்தக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. அதோடு, திமுக தனது இடங்களைக் குறைத்துக்கொண்டது மட்டுமன்றி, பழைய கூட்டணிக் கட்சிகளையும் தலா ஒரு தொகுதியைக் குறைத்துக்கொள்ள வலியுறுத்தி வருகிறது.
அந்தவகையில், மதிமுக கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 4 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. 2 தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), கொமதேக, இந்திய கம்யூனிஸ்ட் (CPI) ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியைக் குறைத்துக் கொள்ள திமுக வலியுறுத்தியதன் பேரில் ஒப்புக்கொண்டுள்ளது.
சின்னம் குறித்த இழுபறி:
தொகுதிப் பங்கீட்டை விட ‘சின்னம்’ குறித்த விவாதமே தற்போது மேலோங்கியுள்ளது. உதயசூரியன் சின்னம்: எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் சம்மதம் தெரிவித்துள்ளன. ஆனால், கமல்ஹாசன் தலைமையிலான மநீம, தங்களது ‘டார்ச்லைட்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால், வெற்றி வாய்ப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக தலைமை முயற்சி செய்து வருகிறது.
உதயசூரியினில் மதிமுக போட்டி:
மதிமுக கடந்த முறை 6 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவிற்கு, இந்த முறை 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு தொகுதியில் மட்டும் கட்சியின் அங்கீகாரத்திற்காகத் தனிச் சின்னத்தில் போட்டியிட அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவைத் தவிர மற்ற சிறிய கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருப்பதே திமுகவிற்குப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
திமுகவின் அதிரடித் தியாகம்:
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்டது. ஆனால், வரும் தேர்தலில் தனது பலத்தை 159 தொகுதிகளாகக் குறைத்துக்கொள்ள அக்கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது, கடந்த தேர்தலை விட 14 தொகுதிகளைக் குறைவாக திமுக இந்த முறை சந்திக்கப் போகிறது. இது ஒரு தந்திரோபாய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: “அதிமுகவை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்!”.. இபிஎஸ், ஆர்.பி.உதயகுமார் மீது ஓபிஎஸ் கடும் தாக்கு..
முதல்வரின் வியூகம்:
அதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்தத் திட்டத்தின் பின்னணியில் ஒரு பலமான கணக்கு உள்ளதாக கூறப்படுகிறது. திமுக நேரடியாகக் குறைவான இடங்களில் போட்டியிட்டாலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பிற கட்சிகளையும் சேர்த்தால், சுமார் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னமே களம் காணும். இது மெஜாரிட்டி பெறுவதை எளிதாக்கும் என்பதே அவர்களின் வியூகம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.