“10+1 சீட்கள் கேட்டு விசிக பிடிவாதம்”.. இறங்கி வருமா திமுக?.. கூட்டணி பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி..
Tamil Nadu Assembly Election: விசிகவின் வளர்ச்சி மற்றும் 44 தனித் தொகுதிகளில் அந்தக் கட்சிக்குள்ள செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, விசிகவின் எண்ணிக்கையைக் குறைப்பது சாத்தியமில்லை என்றும், திமுக 7 முதல் 8 இடங்கள் வரை ஒதுக்க முன்வரலாம் என்றும் கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் - திருமாவளவன்
Tamil Nadu Polls 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. திமுகவும் அதற்கான முழு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுகவும் டெல்லி சென்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதியும், மதிமுகவிற்கு 4 தொகுதியும், கொமதேக, ஐயுஎம்எல், மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதேசமயம், திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூனிஸ்ட், மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அதேசமயம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கைகள் குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிக்க: “இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரியும்”.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த இபிஎஸ் பளீர்!!
திமுகவிடம் 10+1 சீட்கள் கேட்கும் விசிக:
விடுதலை சிறுத்தை கட்சிக்கு 12 தொகுதிகளை ஒதுக்குமாறு பட்டியல் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுகவோ கடந்தமுறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால் இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திமுக தரப்பு தற்போது வரை அழைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்த விசிக, 10+1 கேட்டுள்ளது.
அதாவது, 10 சீட்களுடன், ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என வலியுறுத்துகிறது. இதற்காக, முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை 2 முறை வீட்டில் சென்று திருமாவளவன் சந்தித்தார். அப்போதும் கூடுதல் தொகுதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையானது நீடித்து வருகிறது.
2017 முதல் திமுகவுடன் விசிக பயணம்:
2017 முதல் திமுகவுடன் ஒரு நம்பத்தகுந்த கூட்டணியாக விசிக தொடர்ந்து வருகிறது. விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ‘ஆட்சியில் பங்கு’ என அழைப்பு விடுத்தபோதும், கொள்கை பிடிப்போடு திமுகவுடனான உறவை விசிக தலைவர் தொல். திருமாவளவன் உறுதிப்படுத்தியுள்ளார். சனாதன விவகாரம் மற்றும் பாஜக எதிர்ப்பு ஆகியவற்றில் திமுகவிற்கு பக்கபலமாக விசிக நின்று வருகிறது.
8 இடங்கள் ஒதுக்க திமுக முன்வரலாம்:
ஆனால், விசிகவின் வளர்ச்சி மற்றும் 44 தனித் தொகுதிகளில் அந்தக் கட்சிக்குள்ள செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, விசிகவின் எண்ணிக்கையைக் குறைப்பது சாத்தியமில்லை என்றும், திமுக 7 முதல் 8 இடங்கள் வரை ஒதுக்க முன்வரலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய வரவான தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக இருந்தாலும், விசிக போன்ற ஒரு நம்பத்தகுந்த மற்றும் வளரும் கட்சியைத் திருப்திப்படுத்த திமுக கூடுதல் இடங்களை வழங்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : அதிமுகவினரை திமுகவில் இணைப்பதற்கு திடீர் தடை… பாஜகவை மனதில் வைத்து தலைமை உத்தரவு? முழு விவரம் என்ன!
மநீம கோரிக்கை என்ன?
தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்திற்கு 2 முதல் 3 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தி வருகிறது. ஆனால் டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்தக்கட்ட முடிவு தொடர்பாக ஆலோசிக்க இன்று அவரச செயற்குழு கூட்டத்தை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். இதில் எடுக்கப்படவுள்ள முடிவை பொறுத்து கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.