நெருங்கும் தேர்தல்.. ரெளடிகள் ஜாதகத்தை கையில் எடுத்த போலீஸ்.. தீவிர கண்காணிப்பு!
Police Monitoring Rowdies : தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ரெளடிகளை போலீசார் 4 வகைகளாக பிரித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், திருந்தி வாழ விருப்பம் தெரிவிக்கும் ரெளடிகளுக்கு நன்னடத்தை சான்றிதழை போலீசார் வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் ரெளடிகள் கண்காணிப்பு
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. தேர்தல் பிரச்சாரமும் நாளை 21-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், காவல் துறையை சேர்ந்தவர்களும் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை உள்பட 38 மாவட்டங்களில் முக்கிய ரௌடிகள் குறித்த பட்டியலை காவல்துறை கையில் எடுத்துள்ளது. அதன்படி, அந்த ரவுடிகள் ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 வகைகளாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளனர். அந்த பட்டியலின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ரவுடிகள் செயல்பாடுகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னையில் 4 ஆயிரம் ரெளடிகள் கண்காணிப்பு
இதில், தலைநகரமான சென்னையில் மட்டும் 4 ஆயிரம் ரவுடிகள் உள்ளனர். இவர்கள், தேர்தல் நாளில் வாக்குப்பதிவின்போது சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் சட்டவிராத செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. எனவே, அவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து தேடி வருகின்றனர். இதில், தற்போது வரை சுமார் 100- க்கும் ஏற்பட்ட ரவுடிகள் போலீசார் வசம் சிக்கி உள்ளனர். தலைமறைவாக இருந்து வரும் ரௌடிகளை போலீசார் கைது செய்யும் போது, அவர்கள் திரும்பி வாழ்வதற்கு விருப்பம் தெரிவித்தால் அதற்கும் போலீசார் நன்னடத்தை சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.
மேலும் படிக்க: தேர்தல் தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி.. கரூரில் சீறிய எடப்பாடி பழனிசாமி!
அசம்பாவிதம் நடைபெறாமல் தேர்தல் நடைபெற்றன
இதில், ரவுடிகளிடம் குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 107, 109, 110 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் கையெழுத்து பெற்று வருகின்றனர். இது குறித்து, காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த காலங்கள் முதல் தற்போது வரை சட்டமன்ற தேர்தலின் போது எந்த விதமான பெரிய அசம்பாவிதங்களும் நிகழ்ந்தது கிடையாது. அமைதியான முறையிலே தேர்தல்கள் நடைபெற்று வந்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையும் அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு
மேலும், தமிழகத்தில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியலை தேர்தல் ஆணையம் தயார் செய்துள்ளது. அந்த சட்டமன்ற தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. அதன்படி, 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: பெரம்பூர் தொகுதிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்.. விஜய்யை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!