அதிமுகவில் இணைகிறார் தர்மர் எம்.பி…காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்!
Dharmar MP: அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் எம். பி. அவரிடம் இருந்து விலகி இன்று மாலை எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக, அந்தக் கட்சியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் நீக்கப்பட்டனர். இதனால், அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி நடத்தி வருகிறார். அவருடன் ஆதரவாளர்கள் பலர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைக்கப்படாததாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியதாலும், அவரை சார்ந்த நபர்களுக்கு எதிர்கால அரசியல் கேள்விக்குறியாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தற்போது வரை தெளிவான முடிவை எடுக்காத நிலையில் உள்ளார். இந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் அவரிடமிருந்து விலகி மாற்றுக் கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.
அதிமுகவில் இணையும் தர்மர் எம்.பி.
அந்த வகையில், ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த மாநிலங்களவை எம்பி தர்மர் இன்று சனிக்கிழமை ( ஜனவரி 24) மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ்- இன் ஆதரவாளர்களாக இருந்து வந்த மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினர், மருது அழகு ராஜ், வைத்திலிங்கம் ஆகியோர் அவரிடம் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும் படிக்க: அமைச்சர் நேரு துறையில் ரூ.1000 கோடி ஊழல்?தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!




அரசியல் வாழ்வில் இருந்து விலகிய குன்னம் ராமச்சந்திரன்
இந்த நிலையில், ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களில் ஒருவரான குன்னம் ராமச்சந்திரன் அவரிடம் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தல் காரணமாகவும், உடல் நிலையின் காரணமாகவும் நான் திமுகவில் இணையவில்லை என்றும், மொத்தத்தில் அரசியல் பொது வாழ்வில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார். இவரது இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
2021-இல் அதிமுக சார்பில் எம்பியாக தேர்வு
இவரை தொடர்ந்து, தற்போது எம்பி தர்மர் ஓபிஎஸ் தரப்பில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார். இதனால் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதனால், ஓ. பன்னீர் செல்வத்தின் கூடாரம் காலியாகி வருவதுடன், சட்டமன்ற தேர்தலில் தனித்து விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தர்மர் கடந்த 2021- ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு எம்.பி.- ஆக தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!