K. Pitchandi Tamil Nadu Election: கருணாநிதியால் அடையாளம் காண்பிக்கப்பட்டவர்… 6 முறை வெற்றி வாகை சூடியவர்.. மீண்டும் தடம் பதிப்பாரா கு.பிச்சாண்டி!
Tamil Nadu Elections 2026 : திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதன் தலைவர் மு.கருணாநிதியால் அடையாளம் காண்பிக்கப்பட்டு திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 6 முறை வெற்றியை பதிவு செய்த கு.பிச்சாண்டி மீண்டும கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தடம் பதிப்பாரா கு.பிச்சாண்டி
தமிழக சட்டப் பேரவையின் துணைத் தலைவராக இருந்து வருபவர் கு. பிச்சாண்டி. இவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் குப்புசாமி என்பவருக்கு மகனாக பிறந்தார். ஆரம்ப காலத்தில் தந்தை நடத்தி வந்த ட்ரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர், காலப்போக்கில் அரசியல் ஈடுபாடு தன்னுள் வரவே திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், திமுகவில் படிப்படியாக பயணித்து கடந்த 1989- ஆம் ஆண்டு அப்போதைய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதியால் நேரடியாக அடையாளம் காண்பிக்கப்பட்டு திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றார். அத்துடன், கிடைத்த வாய்ப்பை சாமர்த்தியமாக பயன்படுத்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். அந்தத் தேர்தலில் சுமார் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில், எதிர்த்து போட்டியிட்ட அப்போதைய காங்கிரஸ் எம். எல். ஏ ரவீந்திரனை வீழ்த்தினார்.
கருணாநிதியால் அடையாளம் காணப்பட்டவர் கு.பிச்சாண்டி
இதைத் தொடர்ந்து, கடந்த 1996, 2001, 2006- ஆம் ஆண்டுகளில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தொடர் வெற்றிகளை பதிவு செய்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் முக்கிய புள்ளியாக தனது பெயரை முத்திரை பதித்தார் கு. பிச்சாண்டி. இதன் காரணமாக திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதியுடன் மிகவும் நெருக்கமானார். இதை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பொறுப்பு அவரை தேடி சென்றது. பின்னர் கடந்த 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் எ. வ. வேலு களமிறக்கப்பட்டார். மாவட்ட செயலாளர் பதவியும் அவரிடம் சென்றது.
மேலும் படிக்க: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த அதிமுக.. இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!!
6 முறை சட்டமன்ற உறுப்பினரானார் கு.பிச்சாண்டி
இதற்காக, கு. பிச்சாண்டி அறிமுகம் இல்லாத கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அறிமுகம் இல்லாத தொகுதி என்பதால், தனது வெற்றி வாய்ப்பை கு. பிச்சாண்டி நழுவ விட்டுவிட்டார். இதை தொடர்ந்து, நடைபெற்ற 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் களமிறங்கிய கு.பிச்சாண்டி இரு முறை வெற்றி வாகை சூடினார். ஆரம்பம் முதல் தற்போது வரை 6 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இதில், கடந்த 1996 முதல் 2001 வரை வீட்டு வசதி துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல்
இதனால், வருகிற சட்டமன்ற தேர்தலில் கு. பிச்சாண்டி மீண்டும் இதே தொகுதியில் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் அவரது வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுக தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாளை வேட்பாளர் நேர்காணல் தொடங்க உள்ள நிலையில், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. எதிர்க்கட்சி வேட்பாளரை பொறுத்து கள நிலவரம் மாறுபட வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து விலக தவாக முடிவு?.. பரபரப்பை கிளப்பிய வேல்முருகன்..