சிதம்பரம் அருகே திடீரென உள்வாங்கிய மேம்பாலம்.. நள்ளிரவில் பொது மக்கள் பதறியடித்து ஓட்டம்!
Flyover Damaged: விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம அருகே நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் உயர்மட்ட பாலம் திடீரென உள்வாங்கியது. இதனால், அந்தப் பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே எடுக்கன்காட்டுப்படுகை அருகே கொள்ளிடம் ஆற்றுக்கு முன்னதாக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்த பாலத்தில் திடீரென சுமார் 20 அடி தொலைவுக்கு உள்வாங்கியது. அந்தப் பகுதியில் பாலம் வேலை நடைபெற்று கொண்டிருப்பதால், இதை பார்த்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று பாலம் இடிந்து விழ போவதாக கூறி பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதன் காரணமாக அந்த பாலத்தின் வழியாக சென்று வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவில் உள்வாங்கிய மேம்பாலம்
இந்த நிலையில், பாலம் உள்வாங்கியது தொடர்பாக அந்த பகுதியில் வசித்து வந்த பொது மக்கள் கூறியதாவது: நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று அனைவரையும் எழுப்பி, பாலம் இடிந்து விழப் போவதாகவும், உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறுமாறும், கால்நடைகளை அவிழ்த்து செல்லுமாறும் கூறினர். இதனால் எங்கள் உயிர் எப்போது போகும் என்று தெரியவில்லை. இரவு 2 மணி முதல் குழந்தைகளுடனும், ஆடு, மாடுகளுடனும் அவஸ்தை அடைந்து வருகிறோம்.
மேலும் படிக்க: சுடும் வெயிலில் சில்லென்று மழை: தமிழகத்தில் வானிலை ட்விஸ்ட்!




எங்களுக்கு வீடு அல்லது நிலம் வழங்க வேண்டும்
எனவே, இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உடனடியாக எங்களுக்கு வீடு அல்லது நிலம் வழங்க வேண்டும். இந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட சாலை மற்றும் மேம்பாலம் ஆகியவை அவசர அவசரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் வசித்து வரும் 10- க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அபாயம் ஏற்பட்டது. இந்த மேம்பாலத்தின் அடியில் தூண்கள் அமைக்கப்படாமல், கற்கள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாலத்தின் அருகே சரியான வடிகால் அமைக்கப்படவில்லை.
மழை நீர் வடிகாலில் 15 அடிக்கு மேல் பள்ளம்
இதன் காரணமாக அதிக மழையின் காரணமாக வடிகாலில் 15 அடிக்கு மேல் பள்ளம் விழுந்தது. இது தொடர்பாக புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பாலம் அமைக்கப்பட்ட பகுதி வயல்வெளி என்பதால் முறையான கட்டுமான பணிகளை மேற்கொள்ளாமல் அவசர கதியில் இந்த பாலம் அமைக்கப்பட்டதாக அந்தப் பகுதி பொது மக்கள் குற்றஞ்சாட்டினர். இந்த மேம்பாலம் தொடர்ந்து உள்வாங்கி வருகிறது. இந்த பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: Singanallur Constituency Election 2026: கோவையில் அமைந்திருக்கும் சிங்காநல்லூர் தொகுதி.. திமுக vs அதிமுக.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?