’கூட்டணியில் நான் எடுப்பது தான் முடிவு.. அமித் ஷா அப்படி கூறல’ எடப்பாடி பழனிசாமி பேட்டி!
AIADMK BJP Alliance : அதிமுக பாஜக கூட்டணியில் நான் எடுப்பது தான் இறுதி முடிவு எனவும் கூட்டணிக்கு தலைமை நாங்கள் தான் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, ஜூலை 16 : அதிமுக பாஜக கூட்டணியில் (AIADMK BJP Alliance) சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) மீண்டும் ஒருமுறை விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, அதிமுக பாஜக கூட்டணியில் நான் எடுப்பது தான் இறுதி முடிவு எனவும் கூட்டணிக்கு தலைமை நாங்கள் தான் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொல்லவில்லை என்றும் எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தான் அமித் ஷா சொல்கிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களுக்கு இவ்வாறு கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Polls) இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே, அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது.
அதிமுக பாஜக கூட்டணி
இதன் மூலம், அதிமுக தலைமையில் பாஜக 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கின்றன. கூட்டணி இறுதி செய்யப்பட்டாலும், கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாகவே சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதாவது, மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று கூறி வருகிறார். கூட்டணி ஆட்சி 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் பட்சத்தில், அமைச்சரவையில் பாஜகவும் அங்கம் வகிப்பதே ஆகும்.
ஆனால், இதுபோன்ற கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தலைமை மறுத்து வருகிறார். ஆனால், அமித் ஷாவோ, கூட்டணி ஆட்சி தான் கூறி வருகிறார். இதனால், கூட்டணிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.




’கூட்டணியில் நான் எடுப்பது தான் இறுதி முடிவு’
இந்த நிலையில், 2025 ஜூலை 16ஆம் தேதியான இன்று சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி குறித்து சில முக்கிய விஷயங்களை கூறி உள்ளார். அவர் பேசுகையில், “கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறியது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அமித் ஷா கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை.
நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தான் அமித் ஷா அவர்கள் கூறுகிறார். நான் பலமுறை கூறிவிட்டேன். தனிப்பெரும்பன்மையுடன் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெறுவோம்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது” என எடப்பாடி பழனிசாமி கூறினார். பாமக குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக பாஜக கூட்டணியில், பாமக வந்தாலும் வரலாம் என்று தான் கூறினேன். கூட்டணியில் அவர்கள் இல்லை. பாமக கூட்டணி வந்தாலும் பார்ப்போம்” என கூறினார்.