வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!
Mayiladuthurai Police Stabbed: மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை முன்னாள் ராணுவ வீரர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் போலீசுக்கு கத்திக்குத்து
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை எந்தவித அசம்பாவிதமும் இன்றி சமூகமான முறையில் நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருந்தாலும், சில வாக்குச்சாவடி மையங்களில் கட்சியினர் இடையே மோதல், கள்ள ஓட்டு செலுத்துவது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், பொறையார் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல் ஏராளமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வந்தனர். அந்த வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதில், குத்தாலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் விக்னேஷ் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
தலைமை காவலருக்கு சரமாரி கத்திக்குத்து
அப்போது, வாக்குச்சாவடிக்கு வந்த ஒரு நபர் திடீரென தலைமை காவலர் விக்னேஷ் கத்தியால் குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத காவலருக்கு கழுத்து மற்றும் கைகளில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிவிட்டார். பின்னர், தலைமை காவலரை மீட்டு பொறையார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், வாக்குச்சாவடி பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் காட்டிச்சேரி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: Tamil Nadu Election Voting: தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. தனி ஆளாக வாக்களித்த இளம் பெண்..
முன்னாள் ராணுவ வீரர் கைது – விசாரணை
இதில், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், கடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீசாரை கத்தியால் குத்திய வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. தற்போது, வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் விக்னேஷை அவர் எதற்காக கத்தியால் குத்தினார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த முழுவான தகவல் போலீசார் தரப்பில் இருந்து தற்போது வெளியாகவில்லை.
கட்டுப்பாடுகள் மிகுந்த வாக்குச்சாவடிக்குள் கத்திக்குத்து
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்துக்குள் புகுந்து காவலரை, முன்னாள் ராணுவ வீரர் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரகாசனஹள்ளி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தவெக நிர்வாகிகள் 3 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Tamil Nadu Elections Poll Percentage: ஜனநாயக திருவிழா.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு..