தமிழகத்தில் முதல்முறையாக.. ஆன்லைனில் வேட்பு மனுதாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு..
தேர்தல் நடைமுறையில் பல்வேறு புதிய யுத்திகளை அறிமுகம் செய்து வரும் தேர்தல் ஆணையம், தற்போது நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத் தயார் செய்ய முடியும். தரவுகளில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், கடைசி நேரப் பதற்றத்தைக் குறைக்கவும் இந்த வசதி பெரிதும் உதவும்.

ஆன்லைனில் வேட்பு மனுதாக்கல் செய்யலாம்
சென்னை, மார்ச் 17: வேட்பாளர்கள் ஆன்லைனிலும் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் ஏப்.23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்வது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதே நேரம் தேர்தல் ஆணையமும், தனது பணியை முடுக்கிவிட்டுள்ளது. பறக்கும்படை அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட பணிகளை முடித்து, அடுத்தக்கட்ட பணிக்குத் தயாராகிவிட்டது.
இதையும் படிக்க: விஜய்-அருண்ராஜ் படம் ஒட்டிய சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்… வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்ததா? தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
தேர்தலில் புதிய நடைமுறை:
இதில் முதல்கட்டமாக ஏப்ரல் மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் கேரளம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை வருகிற 30ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கவுள்ளது. தேர்தல் நடைமுறையில் பல்வேறு புதிய யுத்திகளை அறிமுகம் செய்து வரும் தேர்தல் ஆணையம், தற்போது நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தேர்தல் நடைமுறைகளை நவீனப்படுத்தும் நோக்கில் வேட்பாளர்கள் இனி ஆன்லைன் மூலமாகவே தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்:
வேட்பாளர்கள் இதுவரை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மட்டுமே மனு தாக்கல் செய்து வந்தனர். ஆனால் இந்தத் தேர்தலில், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்கு நேரில் செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம். இதற்கென https://suvidha.eci.gov.in என்ற பிரத்யேக இணையதளத்தைத் தேர்தல் ஆணையம் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. இந்தத் தளத்தில் வேட்பாளர்கள் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத் தயார் செய்ய முடியும். தரவுகளில் பிழைகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், கடைசி நேரப் பதற்றத்தைக் குறைக்கவும் இந்த வசதி பெரிதும் உதவும்.
டிஜிட்டல் முறையில் வைப்புத்தொகை:
வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமாகவே அதிகாரியைச் சந்திப்பதற்கான தகுந்த நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற காத்திருப்பும், அலுவலக வளாகங்களில் ஏற்படும் நெரிசலும் தவிர்க்கப்படும். வேட்புமனுவுடன் செலுத்த வேண்டிய, வைப்புத்தொகையை இனி டிஜிட்டல் முறையில் ஆன்லைன் வாயிலாகவே செலுத்தலாம்.
இதையும் படிக்க: கரூர் சம்பவத்தில் காட்டிய வேகம் ஏன விளாத்திகுளம் சம்பவத்தில் காட்டவில்லை – அண்ணாமலை கேள்வி..
அதேசமயம் இணைய வசதி இல்லாதவர்கள் அல்லது பழைய நடைமுறையைப் பின்பற்ற விரும்புவோருக்காக அரசு கருவூலத்தில் ரொக்கமாகச் செலுத்தும் வசதியும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய மிக அவசியமான ‘வாக்காளர் சான்றிதழ்’ ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளும் வசதியும் வேட்பாளர்களுக்குக் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.