பக்கா ப்ளானோடு டெல்லி புறப்பட்ட எடப்பாடி… அமித் ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை… அதிரடியில் அதிமுக கூட்டணி!
Edappadi K Palaniswami: அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக எடப்பாடி கே. பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு இன்று இரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

பக்கா பிளானோடு டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழு அமைக்கப்பட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படாமலும், பேச்சுவார்த்தை தொடங்கப்படாமலும் உள்ளது. இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற்றிருந்த நிலையில், இரவு பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் தலைமையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.
பக்கா பிளானோடி டெல்லி புறப்பட்டு சென்ற எடப்பாடி
இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, அவர் இன்று திங்கள்கிழமை ( மார்ச் 2) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்து அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு, இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைப்பது, கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திமுக அளிக்கும் 25 இடங்களை ஏற்ககூடியது அல்ல… கிரிஷ் சோடங்கரின் பேச்சால் பரபரப்பு
அதிமுகவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகம் திரும்பியவுடன், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான படிவங்களில் கையெழுத்து பெறப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனியாக 170 தொகுதிகளில் களம் காண வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இதில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு போக ஏதேனும் தொகுதிகள் குறைந்தால் 160 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று அதிமுக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் பாஜகவுக்கு சுமார் 30 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 8 என கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தந்த முதல் பிரதமர் நரேந்திர மோடி!