நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு!!
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.103.98க்கும், டீசல் ஒரு லிட்டர் 95.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பல நாட்கள் நீடித்த எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலைகளை மத்திய அரசு இறுதியாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை (மே 15) முதல் அமலுக்கு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் சில்லறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.3.14, ஒரு லிட்டர் டீசல் விலையை ரூ.3.11 உயர்த்தியுள்ளது. சிஎன்ஜி விலையும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.103.98க்கும், டீசல் ஒரு லிட்டர் 95.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் பரபரப்பு தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என்ற தகவல் கடந்த சில நாட்களாகவே பரவி வந்தது. இதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அலைமோதி வந்தனர்.
விலை உயர்வுக்கு காரணம்:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 105 டாலருக்கும் மேலாக அதிகரித்துள்ளதால், மே 15-ம் தேதி முதல் இந்தியாவில் எரிபொருள் விலையை லிட்டருக்கு ₹5 முதல் ₹20 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. எனினும், தற்போது ரூ.3 வரை மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக விலையில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில், இந்தத் திடீர் உயர்வு குறித்த செய்தி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தை நிலவரம்:
எண்ணெய் சந்தை நிபுணர்களின் கருத்துப்படி, கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ₹1,600 கோடி முதல் ₹1,700 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பைச் சரிசெய்ய விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து, சமையல் எரிவாயு (LPG) விலையும் சிலிண்டருக்கு ₹50 வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் நிலைப்பாடு:
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏதுமில்லை என்றும், பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்தில் அதிகப்படியான எரிபொருளை வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன. இருப்பினும், சர்வதேச சூழல் காரணமாக விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
இதையும் படிக்க : தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?