ஈரான் போர் மீதான விவாதம்.. பிரிக்ஸ் உலக நாடுகள் இடையே கருத்து வேறுபாடு!
Iran war discussion | ஈரான் போரால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் கடும் சவால்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விவாதத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏப்ரல் 27 : ஈரான் போர் (Iran War) தொடர்பான விவாதத்தின் மீது பிரிக்ஸ் (BRICS – Brazil Russia India China and South Africa) உறுப்பு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் துணை வெளியுறவு மந்திரிகள் மற்றும் சிறப்பு தூதர்களின் சந்திப்பு நடைபெற்றது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிராந்தியத்தில் நடைபெறும் மோதல்கள் குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
பிரிக்ஸ் உலக நாடுகள் இடையே கருத்து வேறுபாடு
இந்த கூட்டத்தில் ஈரான் போர் தொடர்பாக விவாதம் நடைபெற்ற நிலையில், அது குறித்து உறுப்பு நாடுகள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக குழுவில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் கூட்டம் முடிவடைந்துள்ளது. குறிப்பாக இந்த பேச்சுவார்த்தையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலைப்பாடு காரணமாக கூட்டறிக்கை வெளியிடப்படாமல் போனதாக வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : ஹோர்முஸில் பதற்றம் அதிகரிப்பு.. சிறிய ஈரானியப் படகுகளை அழிக்க டிரம்ப் உத்தரவு
ஈரான் போரால் கடும் சவால்களை எதிர்க்கொள்ளும் உலக நாடுகள்
பிப்ரவரி 28, 2206 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதில் தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில், அது மூன்று நாடுகளுக்கும் இடையே கடும் போராக உருவெடுத்தது. இந்த நிலையில் தான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக எண்ணெய் கப்பல்கள் உலக நாடுகளுக்கு சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையும் படிங்க : விண்வெளிக்கு அனுப்பப்படும் 6 வகை நுண்ணுயிரிகள்.. சிலி நாட்டு விஞ்ஞானிகள் சோதனை!
அதன் விளைவாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையான சவால்களை சந்தித்தன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என பல்வேறு சிக்கல்கள் நிலவியது. மேலும் கச்சா எண்ணெய் அதிரடியாக விலை உயர்ந்ததன் காரணமாக உலக நாடுகள் ஸ்தம்பித்தன. இவ்வாறு ஈரான் போர் உலக நாடுகள் இடையே மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக நடத்தப்பட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் விவாதம் கருத்து வேறுபாடுகள் உடன் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.