பைக்கில் ஏபிஎஸ் ஏன் முக்கியம் – எப்படி செயல்படும்?
Why ABS in Bikes : இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். உயிரிழப்பவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பைக்கில் ஏபிஎஸ் அம்சம் நமக்கு பல வழிகளில் உதவி புரியும். அதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இப்போதெல்லாம், இந்தியாவில் முன்பை விட சாலை வசதிகள் மேம்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் கூட தரமான சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக பைக் ஓட்டுவது மிகவும் எளிதாகத் தோன்றினாலும், அது அதே அளவு ஆபத்தும் அதிகரிக்கிறது. குறிப்பாக அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும்போதோ அல்லது அதிவேகமாக பயணிக்கும் ஒரு சிறிய கவனக்குறைவு கூட ஆபத்தானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. பைக்கில் ஏபிஎஸ் அதாவது ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti-lock Braking System) இருந்தால், விபத்துக்கான வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கலாம். இது உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு பாதுகாப்பு அம்சமாகும்.
ஏபிஎஸ் எப்படி செயல்படும் ?
ஏபிஎஸ் என்பது ஒரு ஸ்மார்ட் தொழில்நுட்பமாகும், இது பைக்கை பிரேக் செய்யும்போது டயர்கள் லாக் ஆவதை அனுமதிக்காது. நீங்கள் திடீரென்று பிரேக் போடும்போது, ஏபிஎஸ் இல்லாத பைக்கின் சக்கரங்கள் ஜாம் ஆகிவிடுகின்றன, இதனால் பைக் சறுக்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஏபிஎஸ் அமைப்பு பிரேக்கிங் பயன்படுத்தப்பட்டாலும் சக்கரங்கள் தொடர்ந்து சுழன்று கொண்டிருப்பதையும், பைக் சமநிலையில் இருப்பதையும் உறுதி செய்கிறது.
ஏபிஎஸ் ஏன் முக்கியம்?
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் சாலை விபத்துகளில் காயமடைகிறார்கள். குறிப்பாக விபத்துகளினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகள் இரு சக்கர வாகனங்களுடன் தொடர்புடையவை. பிரேக் போடும்போது, பைக் ஓட்டுபவர் பைக்கை கட்டுப்படுத்த முடியாமல் போவதுதான் பல நேரங்களில் இந்த விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணம். இதுபோன்ற சூழ்நிலையில், விபத்துகளைத் தவிர்க்க ஏபிஎஸ் உதவுகிறது. ஜனவரி 2026 முதல் அனைத்து புதிய பைக்குகளிலும் ஏபிஎஸ் அம்சத்தை அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன் படி இனி இந்தியாவில் விற்கப்படும் பைக்குகளில் கட்டாயம் ஏபிஎஸ் அம்சம் இடம்பெற்றிருக்க வேண்டும். இது பைக் ஓட்டுபவரை பாதுகாப்பாக உணர வைப்பதோடு, சாலையில் வாகனம் ஓட்டும்போது அவரது தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும் ஏபிஎஸ்
கன மழையின் காரணமாக வழுக்கும் சாலைகள் அல்லது திடீரென எதிரே வரும் வாகனம் போன்ற சூழ்நிலைகளில் ஏபிஎஸ் மிகவும் உதவியாக இருக்கும். இது பைக் ஓட்டுபவர் சரியான நேரத்தில் பைக்கை நிறுத்தி சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இன்று சந்தையில் பல நிறுவனங்கள் சிங்கிள் சேனல் மற்றும் டபுள் சேனல் ஏபிஎஸ் கொண்ட பைக்குகளை விற்பனை செய்கின்றன. இரட்டை சேனல் ஏபிஎஸ் இரண்டு சக்கரங்களிலும் வேலை செய்கிறது, இது மிகவும் பாதுகாப்பானது. ஏபிஎஸ் ஒரு ஆடம்பரம்பரமான அம்சம் அல்ல. ஆனால் அவசியமான பாதுகாப்பு அம்சமாகும். இது பைக் வழுக்குவதைத் தடுக்கிறது மற்றும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. நீங்கள் ஒரு புதிய பைக்கை வாங்க நினைத்தால், எப்போதும் ஏபிஎஸ் உள்ள பைக்கைத் தேர்வுசெய்வது நல்லது. ஏனெனில் அது உங்கள் உயிரை காப்பதோடு மற்றவர்களின் உயிரையும் காப்பாற்றும்.