200 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால் என்ன? அது எப்படி கணக்கிடப்படும்? முழு விவரம் இதோ!
முதல்வராக பொறுப்பேற்ற விஜய், 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என விஜய் கையெழுத்திட்டுள்ளார். அதாவது, விஜய் அளித்த வாக்குறுதியில் 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு எந்த கட்டுப்பாடோ, தகுதியோ இருப்பதாக அவர் குறிப்பிடவில்லை.
தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற கண்கவர் விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்லேகர் தவெக தலைவர் விஜய்க்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். “தமிழகத்தின் முதலமைச்சராகிய சி.ஜோசப் விஜய் எனும் நான்…” என அவர் உறுதிமொழி ஏற்றபோது, அரங்கில் கூடியிருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
மக்கள் முன் முதல் கோப்பில் கையெழுத்து:
வழக்கமாக முதலமைச்சராக பதவியேற்கும் தலைவர்கள், தலைமைச் செயலகம் சென்றே முதல் கோப்புகளில் கையெழுத்திடுவர். ஆனால், விஜய் தான் பதவியேற்றதும் மக்கள் முன்பே தனது முதல் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் கட்டணமில்லா மின்சாரம் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய். பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு கோப்பிலும் அவர் கையெழுத்திட்டார்.
200 யூனிட் மின்சாரம் வாக்குறுதி என்ன?
தவெக தலைவர் விஜய் அறிவித்த வாக்குறுதியில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், முதல்வராக பொறுப்பேற்ற விஜய், 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என கையெழுத்திட்டுள்ளார். அதாவது, விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதியில் 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு எந்த கட்டுப்பாடும் இருப்பதாக அவர் குறிப்பிடவில்லை.
மின்சார சுமை குறையும்:
முதல்வர் விஜய் அமலுக்கு கொண்டுவந்த 200 யூனிட் இலவச மின்சார திட்டம் மூலம், நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் அதிகளவில் பயனடைவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதோடு, ஒரு வீட்டில் இரு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்குள் பயன்பாடு இருந்தால், அவர்கள் முதல் 200 யூனிட்டிற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இது பல குடும்பங்களின் மின்சாரச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும்.
500 யூனிட்டுக்கு மேல் பின்னடைவு:
ஆனால், இந்த திட்டத்தில் உள்ள மற்றொரு முக்கியம்சம் என்னவென்றால், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் அமலில் இருந்த நடைமுறைப்படி, எவ்வளவு யூனிட் பயன்படுத்தினாலும் முதல் 100 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
200 யூனிட் மின்சாரம் இன்று முதல் அமல்:
ஆனால், முதல்வர் விஜய் கையெழுத்திட்டுள்ள இந்த புதிய அரசாணையின்படி, 500 யூனிட்டைத் தாண்டி மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இனி அந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகையும் கிடையாது. இதனிடையே, இந்த 200 யூனிட் கட்டணமில்லா மின்சார திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் மின்சார பயன்பாடு கணக்கெடுக்கும் போது, 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்குள் பயன்படுத்தியவர்களுக்கு, முதல் 200 யூனிட்டுக்கான கட்டணம் கழித்துக்கொள்ளப்படும்.