சோஃபா மாடல் ஆட்சி அல்ல – முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதில்
Udhayanidhi to CM Vijay : முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு பதிலளித்த எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க என்று தெரிவித்தார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் - உதயநிதி ஸ்டாலின்
சென்னை, மே 13 : கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் நிலவி வந்த பரபரப்பு மே 13, 2026 அன்றுடன் முடிவுக்கு வந்தது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்தது. ஏற்கனவே ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லீம் லீக் கட்சிகளுடன் அதிமுகவின் ஒரு பிரிவினரும் தவெக அரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏகளை கட்சி பதவியில் இருந்து அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்
இந்த நிலையில் சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் 2 தொகுதிகளில் வென்ற தவெக தலைவர் விஜய் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தார். ஆனால் தற்போது வரை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் விஜய், மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல? என்றார்.
இதையும் படிக்க : அதிமுகவில் அதிரடி மாற்றம்.. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி காலி… எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்சன்!
மேலும், நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? என கேள்வி எழுப்பியிருந்தார்.
முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதில்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.…
— Udhay – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) May 13, 2026
அவருக்கு பதிலளித்த எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு, நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்கள் வருகை பதிவு செய்யவில்லை.
இதையும் படிக்க : நீட் தேர்வை ரத்து செய்க – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா சிஎம் சார்? கடந்த 2006 ஆம் ஆண்டு அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, பதிவு பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட சோஃபா மாடல் ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல என்று பதிலளித்திருந்தார்.