கோவையில் 90 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் – கையும், களவுமாக கைது
கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தொழில் நிறுவனம் ஒன்றிற்குச் சாதகமாகச் செயல்பட ரூ. 90,000 லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்து உள்ள சம்பவம் மின்வாரிய வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர், ஜூன் 19 : கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தொழில் நிறுவனம் ஒன்றிற்குச் சாதகமாகச் செயல்பட ரூ. 90,000 லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்து உள்ள சம்பவம் மின்வாரிய வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அரசு அலுவலகங்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கோவையில் 90 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது
கோவை, சரவணம்பட்டி கௌமார மடாலயம் அருகே தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராகக் கதிர்வேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கணபதி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இதேபோன்று உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சரவணம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அடுத்தடுத்து ரகசியப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதற்கு இடையே, சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரிடம், குறிப்பிட்ட ஒரு பணிக்காக உதவி செயற்பொறியாளர் கதிர்வேல் ரூபாய் 90 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து உடனடியாகக் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
பொறியாளரை கைது செய்தது எப்படி?
அதிகாரிகளின் ஆலோசனையின்படி, இரசாயனம் தடவிய ரூபாய் 90,000 நோட்டுகளைக் கொண்டு சென்று ஜூன் 19. 2026 அன்று அந்த நபர் கதிர்வேலிடம் கொடுத்து உள்ளார். அப்போது, அங்கு சாதாரண உடையில் ரகசியமாக மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கதிர்வேல் லஞ்சப் பணத்தைக் கையில் வாங்கிய போது அவரை கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த லஞ்சப் பணம் 90 ஆயிரம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கதிர்வேல் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் மின்வாரிய அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கிய இந்தச் சம்பவம் அரசு அலுவலகங்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிற துறைகளிலும் இதுபோல லஞ்சம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.