விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கம்.. விமர்சையாக நடைபெற்ற திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழா..
Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலை 6.15 மணி முதல் மகா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தில் இருக்கும் கலசங்களுக்கு நன்னீர் ஊற்றி சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர், ஜூலை 7, 2025: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று அதாவது ஜூலை 7 2025 ஆம் தேதியான இன்று பிரம்மாண்ட முறையில் மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதற்காக 300 கோடி ரூபாயில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கோயில் வளாகங்கள் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழாவிற்கு தயார் செய்யப்பட்டது. அறுபடை வீடுகளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தளங்களில் ஒன்றாகும். இங்கு பக்தர்கள் காவடி தூக்கியும், பால்குடம் தூக்கியும், முடி காணிக்கை கொடுத்தும், அழகு குத்தியும் வேண்டுதல் மேற்கொள்வார்கள்.
திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழா:
கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கக் கூடிய இந்த சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 2025 ஜூலை 1ஆம் தேதியிலிருந்து யாகசாலைகள் அமைக்கப்பட்டு ஹோமங்கள் வளர்த்து சிறப்பு பூஜைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது.
ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா:
2025 ஜூலை 7ஆம் தேதியான இன்று அதிகாலை வரை யாகசாலைகளில் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்ட நிலையில் சரியாக 6.15 மணி முதல் மகா கும்பாபிஷேக விழாவானது தொடங்கப்பட்டது. இதில் முக்கியமாக ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்ட ராஇருக்கக்கூடிய கலசங்களுக்கு நன்னீர் குடமுழுக்கு ஆனது நடைபெறுகிறது. அதேசமயம் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் மற்றும் பரிவார சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திரண்டுள்ளனர். நள்ளிரவு முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்க ஏற்பாடு:
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடற்கரை மற்றும் கோயில் வளாக பகுதிகளில் இருந்து சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் மக்கள் மீது புனித நீரை தெளிப்பதற்காக ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. இதற்காக 20 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது.
பக்தி பரவசத்தில் மக்கள்:
சூரனை வதம் செய்த சுப்ரமணியர் திருக்கோயிலில் 6.15 மணிக்கு தொடங்கிய இந்த மகா கும்பாபிஷேகமானது சரியாக 6.50 மணிக்கு முடிக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு உள்ள நிலையில் திருச்செந்தூர் கோவில் சுற்றி பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலீஸ் பூத் காவல் கண்காணிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகமே எதிர்பார்த்த திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் திரளான மக்கள் வந்து பக்தி பரவசத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.