கூவம், அடையாறு நதிகள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.. தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..
Coovam Adayar Encroachment: கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் குடும்பங்களின் மறுவாழ்வுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஜூலை 16, 2026: கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அடையாறு, கூவம் நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, பழமை மாறாமல் பாதுகாக்கக்கோரி வி.கனகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் என்பது மிகவும் பழமை வாய்ந்த ஆறுகளாகும். ஒரு காலத்தில் இது மக்கள் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் இந்த ஆறுகளில் கழிவுநீர் கலப்பது, குப்பைகள் கொட்டப்படுவது ஆக்கிரமிப்புகள் என இந்த நதிகள் முழுமையாக மாசடைந்து உள்ளது.
வழக்கு பின்னணி என்ன?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரப்பட்டு சீரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கழிவுநீர்கள் கலப்பது தொடர்பான பிரச்சனைகள் எழுந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இந்த மூன்று நதிகளுமே ஒரு முக்கிய முகத்துவாரமாக பார்க்கப்படுகிறது. அதாவது இந்த நதிகளில் இருந்து வரக்கூடிய நீர் கடலில் கலப்பதுண்டு. எனவே இதனை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மறுசீரமைப்பு திட்டங்களின் மூலம் கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் மீண்டும் புற்றீசல் போல பெருகி வருவதாகக் கூறி, எட்டு வாரங்களில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்துறை, நீர்வள ஆதாரத்துறை, குடிசை மாற்று வாரியத்துறைக்கு உத்தரவிட்டது.
Also Read: மதுரையை குறி வைக்கும் விஜய்.. இரண்டாவது மாநில மாநாடு பிளான்!
மேலும், இப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களின் மறுவாழ்வுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Also Read: திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து எந்த ஊருக்கு பேருந்துகள் இயங்கும்..? விவரம் உள்ளே..!
இதேபோல ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு மற்றும் திருவேற்காடு ஆகிய இடங்களில் கூவம் ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, அப்பகுதிகளில் வசிப்பவர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுத்து, கூவம் ஆற்றை முழுமையாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.