Tamilnadu Weather: ரெட் அலர்ட்: ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்
Nilgiri Red Alert: நீலகிரியில் ரெட் அலர்ட் கனமழை எச்சரிக்கையால் ஊட்டி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வார இறுதி விடுமுறையிலும், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற இடங்களில் பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது. கடும் மழை மற்றும் குளிரால் சுற்றுலா பயணிகள் திட்டங்களை ரத்து செய்துள்ளனர்.

ஊட்டியில் குறைந்த சுற்றுலா பயணிகளின் வருகை
நீலகிரி ஜூன் 16: நீலகிரி மாவட்டத்தில் (Ooty Red Alert) இன்று 2025 ஜூன் 16 ஆம் தேதி விடுக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ மழை எச்சரிக்கையின் தாக்கம், ஊட்டி சுற்றுலா தலங்கள் (Ooty Tourist Places) வெறிச்சோடி காணப்படுகிறது. வார இறுதி விடுமுறை நாட்களிலும், வழக்கமாக கூட்டம் காணப்படும் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா (Government Botanical Gardens, Rose Garden, Doddapet) போன்ற இடங்களில், பயணிகள் வருகை கடுமையாக குறைந்தது. தொடரும் மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் திட்டங்களை இடைநிறுத்தியுள்ளனர். இதனால், சுற்றுலா துறையில் பணிபுரியும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீலகிரியில் மிக கனமழை எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் இன்று (2025 ஜூன் 16) கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனுடன், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா போக்குவரத்து பாதிப்பு
அதேநேரத்தில், நீலகிரிக்கு வார இறுதியில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருவதே வழக்கம். ஆனால், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையால் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 2025 ஜூன் 15 ஆம் தேத்தி நேற்று மழை ஓரளவு குறைந்திருந்த நிலையில், இன்று சாரல் மழையுடன் குளிர்ச்சியான வானிலை நிலவியது. அவலாஞ்சி, அப்பர் பவானியில் கனமழை பெய்தது. கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் ஒரு வீடு மழையால் சேதமடைந்தது.
நீலகிரியில் கனமழை: முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இன்று (ஜூன் 16) வானிலை ஆய்வு மையம் மிக கனமழைக்கான எச்சரிக்கையை வெளியிட்டதையடுத்து, பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலைமையை முன்னிட்டு, சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, வனத்துறை தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சுற்றுலா தலங்களை மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, அவலாஞ்சி, எட்டாவது மைல், படப்பிடிப்பு தளம், பைன் காடுகள், கேரன்ஹில் மற்றும் 9-வது தளம் உள்ளிட்ட இடங்கள் இன்று முதல் தற்காலிகமாக பொதுமக்களுக்கு நுழைவு தடையுடன் மூடப்படுகின்றன. மழை நிறைவடைந்து நிலைமை சாதாரணமாகும் வரை இந்த முடிவு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை
வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2025 ஜூன் 17 முதல் 21 வரை தமிழகம் மற்றும் காரைக்கால், புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும் என்றும், நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
கனமழை எச்சரிக்கை
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 16, 2025
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45–55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். வடதமிழக கடலோரங்களில் 35–45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வரை காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைப் பதிவுகள் (2025 ஜூன் 15 காலை வரை)
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி – 14 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு – 13 செ.மீ., உபாசி – 9 செ.மீ., பந்தலூர், சின்கோனா, வால்பாறை – 8 செ.மீ., மேல் பவானி, தேவாலா, சோலையாறு – 7 செ.மீ. ஆகிய இடங்களில் மழை பதிவாகியுள்ளது.