Tamil Nadu Weather Update: சென்னையில் கொட்டப்போகும் கனமழை.. தமிழ்நாடு முழுவதும் மழைக்கு வாய்ப்பு! அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்..!
Chennai Weather Alert: சென்னை மற்றும் தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 10: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் (Chennai) பகல்நேரத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மாலை வேளையில் வெப்பத்தை குறைக்க அடை மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று அதாவது 2025 ஜூன் 10ம் தேதி மாலை நேரத்தில் சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை (Washermanpet) உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் (Pradeep John) தெரிவிக்கையில், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, வருகின்ற 2025 ஜூன் 12ம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் படிப்படியாக மழை அதிகரிக்கும். அதனை தொடர்ந்து, வருகின்ற 2025 ஜூன் 13ம் தேதி வரை தலைநகர் சென்னையில் மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, நாளை அதாவது 2025 ஜூன் 11ம் தேதி வடதமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டை பொறுத்தவரை வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




2025 ஜூன் 12ம் தேதியான நாளை மறுநாள் வடதமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, நீலகிரி, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூன் 13ம் தேதியில் அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் கனம் முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நாளில் திண்டுக்கல், தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து, 2025 ஜூன் 14ம் தேதியை பொறுத்தவரை கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பா..?
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 10, 2025
2025 ஜூன் 15ம் தேதியும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதற்கு அடுத்த நாளான 2025 ஜூன் 16ம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.