Tamil Nadu Weather Update: கோடையில் குட் நியூஸ்! குறையப்போகும் வெயில்.. அடுத்த சில நாட்களில் மழைக்கு வாய்ப்பு!
Tamil Nadu Weather Forecast: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கரூரில் 39.5° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை வானிலை மையம், வரும் நாட்களில் வெப்பநிலை ஓரிரு இடங்களில் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30 மற்றும் மே 1, 2, 3, 5, 6 ஆகிய தேதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 2, 4 தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் கடுமையான காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல் 30: தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை (Rain) பெய்து வந்த நிலையில், கடந்த 4 தினங்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. இதன் காரணமாக, காலை மற்றும் மதிய நேரங்களில் வெளியில் செல்லும் மக்கள் குடை உள்ளிட்ட வெயிலில் இருந்து பாதுகாக்கும் உபகரணங்களை எடுத்து செல்வது நல்லது. இந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி (Puducherry) மற்றும் காரைக்கால் பகுதிகளில் நிலவிய வெப்பநிலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்வோம். கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 39.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. மற்றபடி, கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
இனி வரும் தினங்களில் வெப்பநிலை அதிகரிக்குமா..?
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வட தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35–39° செல்சியஸூம், தென் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36–37° செல்சியஸூம், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 33-36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 21-28° செல்சியஸ் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் மேல் பகுதிகளிலும், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 2025 ஏப்ரல் 30ம் தேதி மற்றும் 2025 மே 1ம் தேதி தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, 2025 மே 2ம் தேதி மற்றும் 2025 மே 3ம் தேதி என ஆகிய நாட்களில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 மே 4ம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 2025 மே 5ம் தேதி மற்றும் 2025 மே 6ம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
2025 ஏப்ரல் 30ம் தேதியான இன்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2025 மே 1ம் தேதியான நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் 2025 ஏப்ரல் 30ம் தேதி மற்றும் 2025 மே 1ம் தேதி மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 2ம் தேதி மற்றும் 2025 மே 4ம் தேதி வரை தென்தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
2025 மே 2ம் தேதியன்று வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.